tamilnadu

img

தஞ்சாவூர் புத்தகத் திருவிழா

தஞ்சாவூர் ஆக.18- தஞ்சாவூரில் 4-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. வரும் 26-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் தொடக்க விழாவுக்கு ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் முன்னிலை வகித்தார். வேளாண் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு புத்தகத் திருவிழா அரங்கைத் தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.  இதுகுறித்து செய்தியாளர்களிடம் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.முருகன் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகமும், கிங்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நான்காவது ஆண்டாக தஞ்சாவூர் புத்தக திருவிழா அரண்மனை மைதானத்தில் தொடங்கி உள்ளது. தினமும் காலை 11 முதல் இரவு 9 மணி வரை நடைபெறும், விழாவில் தினமும் மாலை 5.30 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சி, மாலை 6.30 மணிக்கு பட்டிமன்றம், கவியரங்கம், இலக்கியத் திருவிழா என தமிழக அளவில் பிரசித்தி பெற்ற பேச்சாளர்களின் உரைவீச்சும், இரவு 8 மணிக்கு தென்னக பண்பாட்டு மையத்தின் கலை பண்பாட்டு துறையின் கலைநிகழ்ச்சி நடைபெறவுள்ளது. புத்தக திருவிழாவில் 101 அரங்குகளில் 75 புத்தக பதிப்பாளர்கள் தங்களுடைய புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். இதில் அனைத்து வித புத்தகங்களுக்கும் பத்து சதவீத தள்ளுபடியும், ஊராட்சி நிர்வாகம், கல்லூரி, பள்ளியில் உள்ள நூலகங்களுக்கு மொத்தமாக வாங்கப்படும் புத்தகங்களுக்கு மேலும் பத்து சதவீத சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படவுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ரூ.1.25 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.  இந்தாண்டு புத்தக திருவிழாவுக்கு மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து தமிழ்ப் பல்கலைக் கழகம், சாஸ்த்ரா கல்லூரி, சத்திரம் நிர்வாகம், சரஸ்வதிமகால் நூல் நிலையம், சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து செய்துள்ளது" என்றார். கிங்ஸ் ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேசன், ரோட்டரி சங்க புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் ராமநாதன், முத்துக்குமார், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி ஆலோசகர் ராஜசேகரன், கலைக்கூட காப்பாட்சியர் சிவக்குமார், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க இணை செயலாளர் பி.குருதேவ் கலந்து கொண்டனர்.