பத்திரப் பதிவு அலுவலகத்தில் நள்ளிரவு வரை சோதனை சிக்கியது ரூ.1.56 லட்சம் : 9 பேர் மீது வழக்கு
தஞ்சாவூர், செப்.18- தஞ்சாவூர் பத்திரவுப் பதிவுத் துறை அலுவலகத்தில், நள்ளிரவு வரை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து, இணை சார் பதிவாளர் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர், ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் பத்திரப் பதிவுத் துறையின் ஒருங்கிணைந்த பதிவாளர் அலுவலகம் உள்ளது. இதில், அதிக அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக, லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு புகார் சென்றது. இதன் பேரில், லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறை, டி.எஸ்.பி., மனோகரன் தலைமையிலான காவலர்கள், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு சோதனையைத் தொடங்கினர். இந்த சோதனை நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்தது. அப்போது கணக்கில் வராத 1.56 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக, இணை சார் பதிவாளர் மஞ்சுளாவிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், இரவு முழுவதும் தொடர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இந்த அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்ய வருபவர்களிடம் இணை சார் பதிவாளர் மஞ்சுளா லஞ்சம் பெற்று, அதைத் தனது உதவியாளர்களிடம் கொடுத்து வைத்து, மாலையில் வீட்டுக்குச் செல்லும் போது வாங்கிச் செல்வதும், அதுபோல, கைப்பற்றப்பட்ட தொகையும் லஞ்சமாகப் பெற்றிருப்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, இணை சார் பதிவாளர் எண் 1, மஞ்சுளா, அவரது உதவியாளர்களான திருவாரூரைச் சேர்ந்த தேவநாதன், முருகானந்தம் மற்றும் பத்திர எழுத்தர்கள் உள்பட மொத்தம் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைப்பற்றப்பட்ட தொகை கும்பகோணம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செவ்வாயன்று ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாற்றுத்திறனாளி மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது மாற்றுத்திறனாளிகள் சங்கம் கடும் கண்டனம்
தரங்கம்பாடி, செப்.18-நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் அருகே கீழையூரை சேர்ந்தவர் பாஸ்கர் மகள் பவித்ரா(8) இரண்டு கைகளிலும், கால்களிலும் விரல்கள் இல்லாமல் இருக்கும் மாற்றுத்திறனாளியான இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்ற பவித்ரா சரியாக படிக்கவில்லை என்று ஆசிரியர் பாஸ்கர் என்பவர் திட்டி கத்தியால் பவித்ராவின் கையில் குத்தியுள்ளார். இதுகுறித்து மாணவி பவித்ரா அவரது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து மாணவியை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் செம்பனார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் பாஸ்கரை(45) கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி பவித்ராவை புதனன்று மருத்துவமனைக்கு சென்று பார்த்த தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.கணேசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் துரைராஜ், வட்டச் செயலாளர் மேகநாதன், மாவட்டக் குழு உறுப்பினர் மாரியப்பன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் ரவீந்திரன், விற்பனையாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் துரைக்கண்ணு உள்ளிட்டோர் சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி, மருத்துவரிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர் மீது தகுந்த வழக்கைப் பதிவு செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டுமென என மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.கணேசன் கூறியுள்ளார்.
பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டு சிகிச்சை பெறும் மாணவிக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
மதுரை, செப். 18 - தஞ்சாவூர் பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த சுந்தர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,” திருச்சிராப்பள்ளி அரசு சட்டக்கல்லூரியில் படித்து வந்த எனது மகள் மீது தவசெல்வன் என்பவர் பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார். இந்தச் சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. தற்போது எனது மகள் தீக்காயங்களுடன் திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அங்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. தமிழக அரசின் பெண்களுக்கான இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எட்டு லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மருத்துவச் செலவிற்காக ஐந்து லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இது குறித்து மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீடு திட்டத்தின் கீழ் 8 லட்ச ரூபாய், மத்திய அரசு 5 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை புதனன்று விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், மாணவிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனை முதல்வர் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். அவருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1.75 லட்சம் வழங்கவேண்டுமென உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைய தினம் இழப்பீடு வழங்குவது குறித்து உறுதியான தகவலளிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளனர்.