சாதிய ஆணவ படுகொலையை தடுக்க அரசியல் கட்சியினர் அனைவரும் எதிர்த்துப் போராட வேண்டும் என சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட சுபாஷ் என்பவரையும், அவரது பாட்டியையும் அவரது தந்தையே கொடூரமாக வெட்டி கொலை செய்தார். அப்போது நீண்ட நேரம் போராடி சுபாஷின் காதல் மனைவி அனுசுயா உயிர் தப்பினார். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சேலம் அரசு அதிநவீன மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனுசியா மற்றும் அவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். உடன் சிபிஎம் மாநில குழு உறுப்பிரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி. டில்லி பாபு, சேலம் மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். வெங்கடபதி எம். குணசேகரன் உள்ளிட்டு பலர் இருந்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது,
"அந்தப் பெண்ணின் உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருவதால் தற்போது அவர் உடல் நலம் தேறி வருகிறார். அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க சேலம் அரசு மருத்துவர்களுக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் குணமாக இன்னும் இரண்டு மாதங்கள் ஆகிவிடும்.
சாதி மறுப்பு திருமணம் என்பதற்காகவே மகன் மற்றும் தாயை கொன்றதோடு திருமணம் செய்து கொண்ட இளம் மருமகளையும் தண்டபாணி சரமாரியாக வெட்டி இருக்கிறார். அந்த அளவில் சாதி வெறி ஆட்டி படைக்கிறது.
எனவே சமூகத்தில் இருப்பவர்கள் சாதி வெறியை எதிர்த்து போராட வேண்டும். அனுசுயாவிற்கும் , சுபாஷிற்கும் நடந்துள்ள இந்த கொடுமை, நாளை வேறு யாருக்கும் நடந்து விடக்கூடாது.
தமிழக அரசு சாதிய ஆணவத்தினை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். தமிழக முதலமைச்சர் இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் சாதியை தூண்டி விடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும். சாதிய ஆணவக் கூட்டம், யார் யார் எல்லாம் பின்னால் தூண்டி விடுகிறார்களோ? அவர்களை எல்லாம் தண்டனைக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் சாதி ஆணவக் கொலை தடுப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
தனது ஒரே மகனையும், தாயையும் வெட்டக் கூடிய அளவுக்கு சாதி வெறி தற்போது தலை விரித்து ஆடுகிறது. எனவே இந்த கொடுமை நீடிக்க கூடாது. சமுதாயத்தில் ஆழமாக புரையோடி உள்ள சாதி வெறியை எதிர்த்து போராடாமல், அரசியல் கட்சியினர் ஏன் மௌனம் காக்கிறார்கள் என்று தெரியவில்லை. சாதி வெறி அடங்காவிட்டால் இந்த கொடுமை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும். எனவே பள்ளிக்கூடத்திலிருந்தே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சாதி வெறி எதிர்த்து விழிப்புணர்வு இயக்கத்தை அரசு உருவாக்க வேண்டும்.
இந்த சாதி வெறியை கருவறுக்க, வேரறுக்க அனைத்து சமூகத்தினரும், அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு எதிராக களமிறங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.