மக்கள் சந்திப்பு இயக்கம்...
தமிழ்நாடு அரசு மின்சார பேருந்துகளை (இ-பஸ்) கொள்முதல் செய்து தனியார் மூலம் இயக்க உள்ளது. இந்த தனியார்மய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக ஆவடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொருளாளர் சசிகுமார், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் மா.பூபாலன் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது.
அடிக்கல் நாட்டு விழா
ஆர்.கே. நகர் 41ஆவது வட்டம் அன்னை சத்யா நகரில் மழை காலங்களில் ஏற்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் புதிய சம்ப் மற்றும் மோட்டர் ரூம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர், மண்டலக் குழு தலைவர் நேதாஜி யூ.கணேசன் மாமன்ற உறுப்பினர் பா.விமலா சிபிஎம் பகுதிச் செயலாளர் வெ.ரவிகுமார், வட்டச் செயலாளர் ஆர்.எம்.ஏ.சசிகுமார், ஜோதிபாசு, வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அசாம் எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு சென்னையில் அஞ்சலி
சென்னை, மே 15- அசாம் எல்லையில் பாதுகாப்பு பணியின்போது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சென்னை வந்தது. தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (46). இவருக்கு ஸ்ரீதேவி (43) என்ற மனைவியும், ஸ்வேதா (17) என்ற மகளும், ஸ்ரீநாத் (15) என்ற மகனும் உள்ளனர். ஸ்ரீதேவி, பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஜெகநாதன், தனது 21 வயது முதல் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் போர் காரணமாக அசாம் எல்லை பகுதியில் பணியில் இருந்து அவர், கடந்த 11ம்தேதி இரவு தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசிவிட்டு எல்லைப் பகுதியில் பணியில் இருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவருடன் பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், அவரை அங்கிருந்து ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வியாழன் காலை விமான மூலம் அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, இந்திய ராணுவத்தினர் தேசியக்கொடி மரியாதை மற்றும் மலர்வளையம் வைத்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தேசியக்கொடி அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.
பூக்கடை சூறை; 2 பெண்கள் கைது
சென்னை, மே 15- நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (40). இவர் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் நடைபாதையில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கடை போடுவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பாக்கியலட்சுமியை 5 பெண்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கிவிட்டு சென்றனர். புகாரின்படி, கோயம்பேடு போலீசார் நெற்குன்றம் சேமாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த சீதா (34), வனிதா (40), எல்லம்மாள் (32) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் கோயம்பேடு மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்ய வந்த 3 பேரில் நெற்குன்றம் சக்தி நகர் பகுதியை சேர்ந்த திலகவதி (40), சசிகலா (37) ஆகியோரை கைது செய்தனர். பிறகு அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
ராணுவ நடவடிக்கைக்கு ஐசிஏஐ கல்வி நிறுவனம் ஆதரவு
சென்னை, மே 15- பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும் பயங்கரவாதிகளின் மறைவிடங்களைக் குறிவைத்து இந்திய அரசும் ராணுவமும் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு இந்திய பட்டயக் கணக்காயர் கல்வி நிறுவனம் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும் பட்டயக் கணக்காயருமான சரண்ஜோத் சிங் நந்தா,கூறுகையில் “ஐசிஏஐ அமைப்பு நமது வீரர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பு உணர்வையும் வணங்குகிறது. இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்கும் விஷயத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என்ற செய்திதான் அது. ‘தேசத்துக்கே முதலிடம்’ என்ற தனது கொள்கையில் எப்போதும் ஐ.சி.ஏ.ஐ உறுதியுடன் நிற்கிறது என்று கூறியுள்ளார்.
இ.சண்முகம் மனைவி காலமானார்
சென்னை, மே 15 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயிரம் விளக்கு பகுதி, புஷ்பாநகர் மூத்த தலைவர் இ.சண்முகத்தின் மனைவிஎஸ்.மாலா வியாழனன்று (மே 15) காலமானார். அவருக்கு வயது 66. அன்னாரது உடல் அஞ்சலிக்காக 4/8, புஷ்பா நகர்,நுங்கம்பாக்கம், சென்னை-34 என்ற முகவரியில் வைக்கப் பட்டுள்ளது.இறுதி நிகழ்ச்சி வெள்ளியன்று மாலை 4மணி அளவில் நுங்கம்பாக்கம் இடுகாட்டில் நடைபெறுகிறது.