சென்னை, ஏப். 18- சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதற்கட்டமாக ரேபிட் கிட் மூலம் புறநோயாளிகளுக்கு கொரோனா நோய்த் தொற்று உள்ளதா என்ற பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா நோய்த்தொற்று அறிகுறியை விரைவாகக் கண்டறியும் வகையில், வெளிநாட்டிலிருந்து ரேபிட் கிட் வரவழைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வெள்ளிக்கிழமை (ஏப். 17) 24ஆயிரம் கருவிகள் தமிழகம் வந்தது. ஏற்கனவே தமிழக அரசு சார்பில் 5 லட்சம் கருவிகள் வாங்க இருந்தில் இருந்து முதற்கட்டமாக 24 ஆயிரம் கருவிகள் வந்தடைந்தது. இந்நிலையில் சனிக்கிழமை காலை மேலும் 12 ஆயிரம் ரேபிட் கிட் பரிசோதனை கருவிகள் தமிழகம் வந்துள்ளது. இது மத்திய அரசு ஒதுக்கீட்டிலிருந்து வந்துள்ள 12 ஆயிரம் ரேபிட் கிட் ஆகும். இவை அனைத்தும் தமிழகத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக அனுப்பப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதனடிப்படையில் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு 1,000 ரேபிட் டெஸ்ட் கருவிகள் முதற்கட்டமாகக் கொண்டுவரப்பட்டது. ஒரு ஒத்திகை நிகழ்வு போன்று ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு வந்த புற நோயாளிகள் 10க்கும் மேற்பட்டோருக்கு ரேபிட் கிட் மூலம் கொரோனா உள்ளதா என்ற பரிசோதனை செய்யப்பட்டது. இதன் பின் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு இந்த உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.