கோவிலாங்குளத்தில் பட்டியலினத்தின் இருவேறு பிரிவினருக்கு உள்ளேயே சாதி ஆணவப் படுகொலை அரங்கேறியிருப்பது, இந்தப் படுகொலைகளைத் தடுப்பதற்கு தனி சிறப்புச் சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலுப்படுத்துவதாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் கே. சாமுவேல் ராஜ் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் இதுபற்றி மேலும் கூறியிருப்பதாவது:
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், கோவிலாங்குளம் அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர், அருந்ததிய இளைஞர் அழகேந்திரன் (21). பட்டதாரியான இவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரர் குல வேளாளர் சமூ கத்தைச் சேர்ந்த ருத்ரபிரியா என்பவரும் பல வருடங்களாக காதலித்துவந்துள்ளனர்.
ருத்ரபிரியாவின் தந்தை சீனிவாசன் இராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர், தாயார் சண்முகதாய் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் செவிலி யராக பணியாற்றுகிறார். ருத்ரபிரியாவின் காதலுக்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு அழகேந்திரனுக்கும் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.
பெண்ணின் பெற்றோர்கள், தங்களது மகளின் காதல் குறித்து உறவினரான பிராபகரன் என்பவரிடம் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளுடன் இருக்கிற இந்த பிரபாகரன் என்பவர், அழகேந்திரனை பேரையூர் வட்டம், வேலாம்பூர் கண்மாய்க்கு இழுத்துச் சென்று படுகொலை செய்துள்ளார். அழகேந்திரனின் ஆடைகளை அகற்றி நிர்வாணப்படுத்தி, சித்ரவதை செய்து தலையையும், உடலையும் இரு துண்டு களாக வெட்டி தனித் தனியாக வீசியுள்ளார்.
தனி சிறப்புச் சட்டத்தின் தேவை
கொலையாளியும், கொல்லப்பட்டவரும் வேறு வேறு உட்சாதிகளைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தினர். அதனால் எஸ்.சி-எஸ்.டி வன்கொடுமைகள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திட முடியாது. சாதி வெறிக்கு மகனைப் பறிகொடுத்த பெற்றோர்கள் சட்டப்படியான இழப்பீட்டைக் கோர முடியாது. அரசு இழப்பீடு அறிவிக்க வேண்டும் என்று அரசின் கருணைக்கு காத்திருக்க வேண்டும்.
சட்டப்படி தனிச் சிறப்பு வழக்கறிஞர் கோர முடியாது. வழக்கை விரைந்து முடிக்கக் கோர முடியாது. குடும்பத்தினர் அரசு வேலை போன்ற மறுவாழ்வைக் கோர முடியாது. இதை எல்லாம் உள்ளடக்கித் தான் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தனிச்சிறப்பு சட்டம் கோருகிறது.
இவ்வாறு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.