tamilnadu

img

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தடையில்லை! - உயர்நீதிமன்றம்

சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் சாம்சங் நிறுவனத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் போராட்டத்தை நடத்த தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சாம்சங் தொழிலாளர்கள், தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைக்காகவும், சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சிபிஎம், சிபிஐ, விசிக, காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் சாம்சங் தொழிலாளர்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க நிர்வாகிகளை வீடு தேடி சென்று காவல்துறையினர் அராஜகமாக கைது செய்தது. அதேபோல், நிறுவனத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் 30 நாட்களாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்த பந்தலை நேற்று இரவு காவல்துறையினர் அகற்றிவியுள்ளனர். 
இந்நிலையில் சாம்சங் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளதற்கு எதிராக சிஐடியு சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் இன்று வலியுறுத்தினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாலாஜி மற்றும் வேல்முருகன், சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் சாம்சங் நிறுவனத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் போராட்டத்தை நடத்த தடையில்லை என்று தெரிவித்துள்ளனர்.