சென்னை, செப்.12- தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் கூறிய புவியசரன், “வடகிழக்குப் பருவமழை தொடங்க இன்னும் சாதகமான சூழ்நிலை ஏற்படவில்லை. தென்மேற்கு பருவமழையால் இதுவரை தமிழகத்திற்கு 26 செ. மீட்டர் மழைப்பொழிவு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 25 செ. மீட்டர் கிடைத்திருக்கிறது. சென்னைக்கு 36 செ. மீட்டர் மழைப் பொழிவுக்கு 42 செ. மீட்டர் கிடைத்திருக்கிறது” என்றார். தென்மேற்குப் பருவமழை 10 நாட்களுக்குப் பிறகே ராஜஸ்தானில் இருந்து படிப்படியாகக் குறையும் என்றும் அக்டோபர் முதல் வாரத்திலேயே தென்மேற்குப் பருமழை முடிவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.