tamilnadu

img

ராதாபுரம்: மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்காலத்தடை நீட்டிப்பு

ராதாபுரம் தொகுதியில் நடைபெற்ற மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளர் அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது
இன்பதுரை வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், செல்லாது என அறிவிக்கப்பட்ட 203 தபால் வாக்குகளையும், 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  ராதாபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப்பெட்டிகள் உயர்நீதிமன்றத் தலைமை பதிவாளர் நியமித்த, ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள ஒரு அறையில் வைத்து மீண்டும் எண்ணப்பட்டது. இதனிடையே உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக வேட்பாளர் இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. அதேசமயம் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை விதித்திருந்தது. 
ராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ.29ம் தேதி வரை தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் இறுதி விசாரணை குறித்து நவம்பர் 29ம் தேதி முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பாவு மற்றும் இன்பத்துரை தரப்பில் ஆவணங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்.