tamilnadu

img

ரயில்வே தனியார்மயத்தை எதிர்த்து தடையை மீறி போராட்டம்

சென்னை, ஜூலை 9- ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முடிவை கண்டித்து டிஆர்இயூ சார்பில் வியாழனன்று (ஜூலை 9) சென்னை சென்ட்ரல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய பாஜக அரசு ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக தனிமனித இடைவெளியோடு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ரயில்வே காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். ஒலிப்பெருக்கி சாதனங்களை கைபற்றி வழக்கு பதிவு செய்வதாக மிரட்டினர். அதனையும் மீறி போராட்டம் நடைபெற்றது.  ஒர்க்ஷாப் டிவிசன் செயலாளர் ஜி.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் பேசிய டிஆர்இயூ செயல்தலைவர் அ. ஜானகிராமன், “மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுத்துறையான ரயில்வேயில், 109 வழித்தடங்கள், 151 ரயில்கள், 224 நடைகள் தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவு ஜனநாயக விரோதமானது” என்றார்.

“ரயில்வே தனியார் வசமானால் ஏழை எளிய மக்களின் ரயில் பயணம் பகல் கனவாகும். 35 ஆண்டுகளுக்கு ரயில் கட்டணங்களை தனியார் நிறுவனங்களே நிர்ணயிக்கும் அபாயம் உள்ளது. முன்பதிவு முறை மட்டுமே இருக்கும். அனைத்து ரயில்களும் குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டு, பயணக்கட்டணம் வரம்பின்றி உயர்த்தப்படும்” என்றும் அவர் தெரிவித்தார். பண்டிகை மற்றும் விடுமுறைகாலங்களில் ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளையை போல் ரயில்வே துறையிலும் நிகழும். அதற்கான அனுமதியையும் தனியார் ரயில்வே நிறுவனங்கள் பெற்றுள்ளன. இதனால் ரயில்வே லாபம் குறைய வாய்ப்புள்ளது. சரக்கு ரயில் போக்குவரத்துக்கான வழித்தடங்களை தனியாரை அனுமதிப்பதன் மூலம் இருப்புப் பாதைகள் பலவீனப்படும். ரயில் பயணிகளின் பாதுகாப்பான பயணம் கேள்விக்குறியாகும், ரயில்வே தொழிலாளர்களின் வேலை பாதிக்கும்” என்றும் அவர் பேசினார். துணைப் பொதுச் செயலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.