சென்னை, மே 2- ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ளது வருவதால் வேலை இழந்து பரிதவித்து வரும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரூ. 15 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்த என்று தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் வி. குமார், மாநில பொதுச்செயலாளர் எம். சிவாஜி ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:
மனித குலத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா எனும் கொடிய நோயால் உலகத்தின் பலநாடுகளும், ஒட்டுமொத்த இந்தியாவும் முடங்கியுள்ளது. கொரோனாவை காரணம் காட்டி அவசர கதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் அன்றாடம் உழைப்பவர்கள், ஏழைகள் எப்படி வாழ்வார்கள் என்பதை மத்திய மாநில அரசுகள் கவனத்தில் மேற்கொள்ளாமல் எடுக்கப்பட்ட முடிவால் முறைசார தொழிலாளர்கள், மோட்டார் தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.
ஏற்கனவே 40 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கை நீடித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. தினந்தோறும் ஆட்டோக்கள் சாலையில் ஓடும்போது தான் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கையும் ஓடும். ஊரடங்கள் அன்றாடம் கட்ட வேண்டிய நாள் சீட்டு, வாரச்சீட்டு, மாதாந்திர சீட்டு கட்டமுடியவில்லை. ஆட்டோவிற்கு பைனான்ஸ் கட்டமுடியவில்லை. தொடர்ந்து 54 நாட்கள் நிறுத்தி வைத்துள்ளதால் ஆட்டோவை பராமரித்து மீண்டும் சாலையில் ஓட்டுவதற்கு பல ஆயிரம் தேவை என்ற நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. மேலே சொன்னவற்றோடு அன்றாடம் மூன்று வேலை சாப்பாட்டிற்கு வழியில்லாமல் குடும்பமே வறுமையில் தள்ளாடுகிறது. அரசிடம் கோரிக்கை வைத்தால் நலவாரியத்தில் உள்ளவர்களுக்கு இரண்டாயிரம் நிவாரணமும், அரிசி,பருப்பு வழங்கியுள்ளதாக தம்பட்டம் அடிக்கிறது.
6 லட்சம் பேர் ஈடுபட்டுள்ள ஆட்டோ தொழிலில் நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் சுமார் 40,000 பேர்தான். அதிலும் புதுபித்து வைத்திருப்பவர்கள் சுமார் 25,000 பேர்தன். ஆறு லட்சம் எங்கே. 25 ஆயிரம் எங்கே என்பதை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். தொடர்ந்து தமிழக அரசக்கு சம்மேளனம் சார்பிலும், மாவட்ட சங்கங்கள் சார்பிலும் பல மனுக்கள் அனுப்பி விட்டோம். நலவாரியத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு மட்டும் நிவாரணம் என்பதை மறுபரிசீலனை செய்து வட்டாரபோக்குவரத்து அலுவலகங்கள் மூலம் கணக்கெடுத்து ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள அனைவருக்கும் ரூபாய் 10,000.00 வழங்க வேண்டும் என நாங்கள் கொடுத்த மனுக்கள் மீது அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை. மற்ற முறைசார தொழிலாளர்களை கணக்கெடுப்பதை விட ஆட்டோ தொழிலாளர்களை கணக்கு எடுப்பது மிகவும் எளிது என்ற போதும் அரசு தரப்பில் அதற்கான எந்த முயற்சியும் எடுக்க வில்லை.
மேலும் ஆட்டோ தொழிலாளர்கள் கேட்பது கல்வி உதவித்தொகையோ, திருமண உதவித்தொகையோ, இயற்கை மற்றும் விபத்து நிவாரணத்தொகையோ கேட்கவில்லை. இவைகள் வழங்கத்தான் நலவாரிய நிதி பயன்படுத்த வேண்டும். இது பேரிடர் காலம் என்பதால் அரசு நிதி ஒதுக்கி அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கும் நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய அரசு நலவாரியத்தை காரணம் காட்டுவாது ஆட்டோ தொழிலாளர்களை அவமதிக்கும் செயல் என்பதை சம்மேளனம் சுட்டிக்காட்டுகிறது. "ஆட்டோ தொழிலாளர்களை வாழவிடு- வாழ்வதற்கு 15,000 ரூபாய் நிவாரணம் கொடு" என்ற முழக்கத்தை முன்வைத்து வி.பி.சிந்தன் நினைவு நாளான மே 8 அன்று காலை போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
காலை 10 மணிக்கு துவங்கி 10.15 மணி வரை தோழர்கள் வீடுகளில், அல்லது பொருத்தமான ஆட்டோ நிறுத்தங்களில் அல்லது மையப்படுத்தப்பட்ட இடத்தில் மாவட்ட தன்மைக்கேற்ப சமூக இடைவெளியை கடைப்பிடித்து போராட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் வேண்டுகோள் விடுக்கிறது. இப்போராட்டத்திற்கு ஆட்டோ தொழிலாளர்களும், பொதுமக்களும் பேராதரவு தரவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.