tamilnadu

img

பூந்தமல்லி - பரந்தூர், கோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயில் பாதை 6 மாதங்களில் திட்ட அறிக்கை

சென்னை, மே 30- சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பூந்தமல்லி-பரந்தூர் மற்றும் கோயம்பேடு-ஆவடி இடையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்திற்கு இன்னும் ஆறு மாதங்களில் விரிவான திட்ட அறிக்கை தயாராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதற்கட்டமாக 54 கி.மீ. தூரத்திற்கு விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையில், சென்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மெட்ரோ ரயில் சேவைக்கு நாளுக்கு நாள் வரவேற்பும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், பயணிகள் கோரிக்கையை ஏற்று சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்கும் வகையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டம் 116.1 கி.மீ. தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் நீட்டிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த மூன்று வழித்தடங்களில் ஒன்றான கலங்கரை விளக்கம் பூந்தமல்லி வரையிலான நான்காவது வழித்தடத்தை தொடர்ந்து 43.60 கி.மீ. தூரத்திற்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டது அதன்படி இந்த திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டது இவற்றில் இரண்டு நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியிருப்பதாவது, பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதில் வழித்தடங்கள்,  நிலையங்களின் எண்ணிக்கை, வழித்தடத்தின் நீளம், பயணிகளின் எண்ணிக்கை திட்ட மதிப்பீடு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற உள்ளது.

பூந்தமல்லி பரந்தூர் வரை மெட்ரோ நீட்டிப்பு திட்டத்தில் நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை, பாப்பன்சத்திரம் உள்ளிட்ட 19 மெட்ரோ ரயில் நிலையங்கள் சாத்தியக்கூறு அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இந்தத் திட்டத்திற்காக ரூ.10,712 கோடி என திட்ட மதிப்பீடு மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கை ஆறு மாதங்களில் தயாரிக்கப்பட உள்ளது. என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை மெட்ரோ நீட்டிப்பு தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரைட்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம் முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.7 கி.மீ. தூரத்திற்கு சுமார் 15 உயர்மட்ட மெட்ரோ நிலையங்கள் அமைக்க ரூ.6376.18 கோடி மதிப்பீட்டில் சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் மேலும் 6 மாதங்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.