tamilnadu

img

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுக: சிபிஎம் வலியுறுத்தல்!

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் மிகுந்த வேதனை தருகிறது. அவரது இழப்பால் வாடும் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

சில நாட்கள் முன், மூட்டு வலியால் பாதிக்கப்பட்டிருந்த வீராங்கனை பிரியாவிற்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சையில் ஏற்பட்ட தவறின் காரணமாக அவரின் உறுப்புகள் செயலிழந்து,  இறுதியில் உயிரே பறிபோனது. இந்த இழப்பு ஈடுசெய்ய முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அறுவை சிகிச்சைக்கு பின் கட்டுப்போடும்போது இறுக்கமாக இருந்ததால் அது ரத்த நாளங்களை அடைத்துள்ளதும், அதனாலேயே மரணம் ஏற்பட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தவறு செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அரசு, ரூ. 10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. என்ன செய்தாலும் ஈடு செய்யவே முடியாத பேரிழப்பாகும்.

மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே இத்தகைய துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே, பிரியாவின் மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதுடன் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், கூடுதல் இழப்பீடும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)  மாநிலக்குழு சார்பில் வலியுறுத்துகிறோம்.தமிழ்நாடு அரசாங்கமும், மருத்துவத் துறையும் இதுபோல் இனியொரு மரணம் நடக்காத விதத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.