பூந்தமல்லியில் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்துக மாதர் சங்க ஒன்றிய மாநாடு தீர்மானம்
திருவள்ளூர், ஜூன் 25- பூந்தமல்லி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மாதர் சங்கத்தின் ஒன்றிய மாநாட்டு வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் மாதர் சங்கத்தின் பூந்தமல்லி ஒன்றிய மாநாட்டு ஞாயிறன்று ஒன்றிய தலைவர் ஏ.செல்வி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பி.சசிகலா வரவேற்றார். ஒன்றிய செயலாளர் பௌர்ணமி வேலை அறிக்கையை வாசித்தார். மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் இ.மோகனா துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் பி.பத்மா நிறையுரையாற்றினார். ஒன்றிய குழு உறுப்பினர் தனம் நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு பூந்தமல்லி ஒன்றிய தலைவராக ஏ.செல்வி, செயலாளராக பி.சசிகலா, பொருளாளராக ஜெ.தமிழ்அழகி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் பெண்கள் பணி செய்யும் இடங்களில் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும், பூந்தமல்லியில் பெண்களுக்கான அரசு கல்லூரி அமைக்க வேண்டும், திருநின்றவூரில் உள்ள அரசு மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும், பூவிருந்தவல்லியில் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ரேசன் அரிசி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
தாம்பரம், ஜூன் 25- தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் ஒன்றிய அரசின் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு ரேசன் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு பல்வேறு இடங்களிலும் உள்ள ரேசன் கடைகளுக்கு லாரிகள் மூலமாக அனுப்பிவைக்கப்படுகிறது. இந்நிலையில், செவ்வாயன்று ஆவடியில் இருந்து 24 டன் அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு பெருமாள்(40) என்ற ஓட்டுநர் சிட்லபாக்கம் சேமிப்பு கிடங்கிற்கு வந்தார். சேமிப்பு கிடங்கின் அருகே வந்தபோது சாலையில் இருசக்கர வாகனம் ஒன்று திடீரென குறுக்கே சென்றதால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சேமிப்பு கிடங்கின் மதில் சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. இதனைக் கண்ட பொதுமக்கள் விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர் பெருமாளை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டில் முதல் பெண் ஆட்சியர்
செங்கல்பட்டு, ஜூன் 25- செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் 4ஆவது ஆட்சியராக தி.சினேகா, புதனன்று (ஜூன் 25) பொறுப்பேற்றுக் கொண்டார். செங்கல்பட்டு மாவட்டத்தில் பொறுப்பேற்கும் முதல் பெண் ஆட்சியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மின் தடை
அம்பத்தூர், ஜூன் 25- அம்பத்தூர் பகுதி கொரட்டூர் காவல் நிலையம், கிழக்கு அவன்யூ சாலை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, இந்தியன் வங்கி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 27, 29, 31, 49, 50 தெரு வரை, அண்ணா தெரு, பாரதியார் தெரு, ரெயில்வேஸ்டேஷன் சாலை, மாருதி பிளட்ஸ், ராஜன் குப்பம், மெட்ரோ சிட்டி கட்டடம் 1, விஜிஎன் மகாலட்சுமிநகர், பெருமாள் கோவில் தெரு ஆகிய பகுதிகளின் மின் விநியோகம் நிறுத்தப்படும். ஆவடி: சிவசக்தி நகர், 40 அடி, 60 அடி சாலை, ஜோதி நகர், நாகம்மை நகர், அந்தோணி நகர், இஎஸ்ஐ அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி நிறைவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும் என தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது.
ரேசன் பொருள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
காஞ்சிபுரம், ஜூன் 25- காஞ்சிபுரம் அருகே உத்திரமேரூர் சாலையில் களக்காட்டூர், விச்சந்தாங்கல், காலூர் கிராமங்கள் உள்ளன. இந்த, 3 கிராமங்களிலும் கடந்த 2 மாதங்களாக அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் முறையாக வழங்காததை கண்டித்து, அப்பகுதி மக்கள் களக்காட்டூர் அருகே காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பொருட்கள் வாங்கச் சென்றால் நெட்வொர்க் பிரச்சனை, கைரேகை பதிவாகவில்லை, கருவிழி பதிவு ஏற்கவில்லை உள்ளிட்ட காரணங்களை கூறி ரேசன் கடை பொருள்களை தர மறுக்கின்றனர். இதுகுறித்து, தாலுகா அலுவலகத்தில் மனுகொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி முழக்கமிட்டனர். மேலும், கடந்த மாதம் வழங்காத பொருள்களையும் சேர்த்து வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாகறல் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இச்சாலை மறியல் போராட்டத்தில் காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
குடிநீர், கழிப்பிட வசதியை மேம்படுத்த கோரி சட்ட பல்கலைக்கழக மாணவிகள் போராட்டம்
சென்னை, ஜூன் 25 - குடிநீர், கழிப்பிட வசதி கேட்டு சட்டப்பல்கலைக் கழக மாணவிகள் செவ்வாயன்று (ஜூன் 24) போராட்டம் நடத்தினர். சென்னை தரமணியில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக் கழக வளாகம் மற்றும் சேப்பாக்கத்தில் விடுதிகள் உள்ளன. பல்கலைக் கழக வளாகத்தில் சுமார் 150 அறைகளில் 450 மாணவிகளும், சேப்பாக்கம் விடுதியில் 150 மாணவர்கள் தங்கி பயின்று வந்தனர். சேப்பாக்கம் விடுதியில் இருந்த மாணவிகளை கடந்த மாதம் வெளியேற நிர்வாகம் உத்தரவிட்டது. கோடை விடுமுறைக்கு பிறகு பல்கலைக் கழகத்திற்கு வந்த மாணவி களுக்கு பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்க வைத்தனர். இட நெருக்கடி, மாணவிகளின் எண்ணிக்கை அதிகமானதால் கழிப்பிடம், தண்ணீர் போதவில்லை. இதனால் ஜூன் 24 அன்று மதியம் மாணவிகள் போராட்டம் நடத்தி னர். இந்த உள்ளிருப்பு போராட்டம் நள்ளி ரவிலும் நீடித்தது. இதன்பின் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் ஓம் பிரகாஷ், மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அடிப்படை வசதிகளை மேம்படுத்த உடனடியாக நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். சேப்பாக்கம் விடுதியில் தங்கி இருந்த மாணவிகளுக்கு, புதிய விடுதியை ஏற்படுத்த விரைந்து நடவடிக்கை எடுப்ப தாகவும் உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.இந்த போராட்டத்தை இந்திய மாணவர் சங்கத்தின் கிளைத் தலைவர் ஆர்த்தி பிரியா, செயலாளர் ராமலிங்கம், தென்சென்னை மாவட்டத் தலைவர் அமர் ஆகியோர் முன்னின்று நடத்தினர். இதுகுறித்து மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு விடுத்துள்ள அறிக்கையில், “இந்த கல்வி ஆண்டில் புதிதாக சேர்ந்திருக்கும் அனைத்து மாணவி களுக்கும் விடுதி வழங்க வேண்டும். எனவே, தற்காலிக விடுதியை உருவாக்க வேண்டும். புதிய விடுதியை அமைத்து இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் மஞ்சப்பை வழங்க புதிய இயந்திரம்
அண்ணாநகர், ஜூன் 25- பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தானியங்கி மஞ்சப்பை விநியோக இயந்திரங்களை தமிழக அரசு நிறுவியுள்ளது. இந்த இயந்திரத்தில் ரூ.5 நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை கிடைத்துவிடும். இதற்கு மக்களி டம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்படி, கோயம்பேடு மார்க்கெட்டில் மஞ்சப்பை இயந்திரம் அமைக்கப்பட்டது. இந்த இயந்திரம் பழுதான தால், கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் பிளாஸ்டிக் பைகள் விற்பனை தலைதூக்கியது. இதனால் மஞ்சப்பை இயந்திரம் வழங்கும் கருவியை பழுதுநீக்க வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பழுதடைந்த மஞ்சப்பை இயந்திரத்தை அகற்றிவிட்டு, புதிய மஞ்சப்பை இயந்திரத்தை அமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.