சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வாய்ப்புகள் குறைவு என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து தேர்தல் தேதிகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது, பழங்குடியின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கவில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தேர்தலுக்கான அறிவிப்பு விதிகளுக்கு உட்பட்டு பிறப்பிக்கப்படவில்லை எனக்கூறி, தேர்தலை ரத்து செய்ததோடு புதிய அறிவிப்பாணை வெளியிட்டு 2016 டிசம்பருக்குள் தேர்தல் நடத்துமாறு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. உரிய காலத் திற்குள் மீண்டும் தேர்தலை நடத்தக் கோரி திமுகவும் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து 2017ஆம் ஆண்டு நவம்பர் 17-க்குள் தேர்தல் நடத்துமாறு உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றத்தின் இந்த உத்தரவும் செயல் படுத்தப்படவில்லை. நீதிமன்ற விதித்த கால அவகாசத்திற்குள் தேர்தல் நடத் தப்படாததால் மாநில தேர்தல் ஆணையம் மீது திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு, உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்ட வணையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தது. மீண்டும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வார்டு மறுவரையறை பணிகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நிறைவடையும். பின்னர் வார்டு மறுவரையறை அறிக்கை ஆகஸ்ட் 30 ஆம் தேதி அரசிடம் அளிக் கப்படும். அதன்பின்னரே உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்பதால் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு பிறகே தேர்தல் நடத்துவது குறித்து முடிவு செய்யமுடியும் என மாநில தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிடக் கோரும் உச்ச நீதிமன்ற வழக்கில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலாளர் ஹன்ஸ்ராஜ்வர்மா தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் மக்கள் பணிகள் பாதிப்பு என்ற குற்றச்சாட்டு தவறானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தூய்மைக் காவலர்கள் மூலம் பணிகள் நிறை வேற்றப்படுவதாகவும், அதற்கென தனி அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் உரிய முறையில் நிறைவேற்றப்படுவதாகவும், குடிநீர் முறையாக வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாக்காளர் பட்டியல் இந்தியத் தேர்தல் ஆணையத்திடமிருந்து மாநிலத் தேர்தல் ஆணையத்துக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை அனுப்பிய பிறகு அதனைச் சரிபார்க்க வேண்டியிருப்பதாகவும், எனவே தற்போதைய சூழலில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ஆளும் அதிமுக அரசு, கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இழுத்தடிக்கொண்டே செல்வதால்‘சிந்து பாத்’ கதையாக மாறிவிட்டது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடக்கும் என்பது உறுதியாகவில்லை.