tamilnadu

img

கள்ளக்குறிச்சி வழக்கு: மனிதம் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி வழக்கில் உண்மைகளை வெளிக் கொண்டு வருவதற்கு ஏதுவாக நேர்மையான, சுதந்திரமான விசாரணையை நடைபெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனிதம் அமைப்பின் சார்பிலும், சமூக ஆர்வலர்கள் சார்பிலும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 12.9.2022 அன்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,
மிகுந்த வேதனையுடனும், கவலையுடனும் இதில் கையெழுத்திட்டுள்ள சமூக ஆர்வலர்களாகிய நாங்கள் இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.
சந்தேகத்திற்குரிய முறையில் இறந்து போயுள்ள கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் சம்பந்தபட்ட ஐந்து எதிரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களில் (எண்கள் 20088, 20135 / 2022) 26.08.2022 அன்று பிறப்பித்துள்ள உத்தரவில் சொல்லப்பட்டுள்ள சில அம்சங்கள் எங்களை மிகவும் கலக்கமடையச் செய்துள்ளது.
இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்காத, சிபிசிஐடி போலீசாரின் புலன் விசாரணையில் இருந்து வருகின்ற ஒரு வழக்கில் மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதி இறுதி முடிவே எடுத்துள்ளார். ஜாமீன் மனு விசாரணையின்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து உச்சநீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்புகளுக்கு முரணாக இந்த உத்தரவு உள்ளது. குற்றம் தொடர்பான சாட்சி, ஆதாரங்கள் நிலை நிறுத்தப்படவில்லை என்றும், இந்த குற்றம் வன்புணர்வோ, கொலையோ அல்ல என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக மாணவியால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் கடிதத்தில் உள்ள கையெழுத்துக்கள் தனது மகளுடையது அல்ல என மாணவியின் தாயார் மறுத்துள்ள நிலையில், அந்த கடிதத்தை நீதிபதி ஆதாரமாக ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும், பள்ளியின் சுவற்றில் உள்ள ரத்தக் கறையானது பெயிண்ட்டால் ஏற்பட்டுள்ளது என்றும், அதில் ரத்தம் இல்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். நீதிபதியின் இந்த முடிவுகள், தேவையற்ற கருத்துக்கள் வழக்கின் இறுதி முடிவையும், விசாரணை நீதிமன்றத்தையும், புலன் விசாரணையையும் பாதிப்படையச் செய்யும்.
ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், அந்த மனுவின் நோக்க எல்லைக்கும் அப்பால் சென்று வழக்கின் தகுதியையே நீதிபதி முடிவு செய்துள்ளார்.
இன்னும் இறுதி முடிவுக்கு உட்படுத்தப்பட்டிருக்காத பிரேத பரிசோதனை சான்றிதழ், வல்லுநரின் கருத்துக்களின் அடிப்படையில் மாண்புமிகு நீதிபதி அவர்கள் மேற்குறிப்பிட்ட முடிவை எடுத்துள்ளார். சிறுமியின் பிறப்புறுப்பை சுற்றி காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை சான்றிதழில் காணப்படவில்லை என்பதினால் வன்புணர்வு குற்றமே நடைபெறவில்லை என முடிவு செய்துள்ளார்.
பிரபலமான மதுரா வழக்கில் 1979 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் தொடர்ச்சியாக 1983 ஆம் ஆண்டு வன்புணர்வு தொடர்பான குற்றங்களில் பாராளுமன்றம் கொண்டு வந்துள்ள திருத்தங்கள் எங்கள் கவனத்திற்கு வருகின்றது. வன்புணர்வு மற்றும் பாலியல் தாக்குதல் குற்றம் தொடர்பாக ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து வந்த கருத்துக்களில் 1983 ஆம் ஆண்டுக்கு பிறகு பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இந்த அம்சங்களை நீதிபதி அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தால் ஜாமீன் மனுவில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவின் காரணமாக பெரும்பாலான பொது மக்களிடம் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து தங்களது நீதிமுறையான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். மாண்புமிகு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் என்ற முறையில், இறந்துபோன பள்ளி சிறுமியின் வழக்கில் உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு ஏதுவாக நேர்மையான, சுதந்திரமான விசாரணை நடைபெறுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்திடுமாறு வேண்டுகின்றோம்.
1.    திருமிகு வசந்திதேவி, கல்வியாளர்
2.    திருமிகு தாவூத் மியான்கான், கல்வியாளர்
3    திருமிகு உ.வாசுகி, துணைத் தலைவர்,        
    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
4.    திருமிகு தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர்
5.    திருமிகு சு.வெங்கடேசன், நாடாளுமன்ற உறுப்பினர்
6.    திருமிகு பி.ஆர்.நடராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்
7.    திருமிகு டி.கே.ரங்கராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
8.    திருமிகு நாகை.மாலி, சட்டமன்ற உறுப்பினர்
9.    திருமிகு எம்.சின்னதுரை, சட்டமன்ற உறுப்பினர்
10.    திருமிகு எஸ்.எஸ்.பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர்
11.    திருமிகு மணிமேகலை, பேராசிரியர், பாரதிதாசன் பல்கலைக்கழகம்
12.    திருமிகு வெங்கடேஷ் ஆத்ரேயா, பொருளாதார நிபுணர்
13.    திருமிகு சங்கர், DEEPS
14.    திருமிகு செந்தில்நாதன், மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்
15.    திருமிகு இளங்கோ, வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்
16.    திருமிகு நிர்மலா ராணி, வழக்கறிஞர்
17.    திருமிகு தமிழ்ச்செல்வன், எழுத்தாளர்
18.    திருமிகு ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர்
19.    திருமிகு பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர்
20.    திருமிகு விஜயா சங்கர், மூத்த பத்திரிக்கையாளர்

;