tamilnadu

மழை நீரில் எண்ணெய் கழிவு!

சென்னை, டிச. 9- சென்னை எண்ணூரில் மழைநீரில் எண்ணெய் கசிவு கலந்தது குறித்து நேரில் ஆய்வு செய்ய தமிழ்நாடு சுற்றுச் சூழல் துறை செயலாளர் தலைமை யில் குழு அமைத்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தர விட்டுள்ளது.

சென்னை எண்ணூரில் வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் தொடர்பாக, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்தது.

இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வில் சனிக்கிழமை (டிச.9) விசாரணைக்கு வந்தது. அப்போது மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், கச்சா எண்ணெய் கசிவை ஆய்வு செய்ததில், சென்னை பெட்ரோ லிய கழகத்தின் தெற்கு நுழைவு  வாயிலில் இருந்து தடயங்கள் தெரி வதாகவும், அது பக்கிங்காம் கால்வாய் வழியாக பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை நடத்திய விசாரணையில், வெள்ள நீரில் வேண்டுமென்றே கச்சா எண்ணெய் கலக்கப்பட்டதாக எந்த  ஆதாரங்களும் இல்லை என்றும், எண்ணெய் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தீர்ப்பாய உறுப்பினர்கள், 5 கி.மீ. சுற்றளவிற்கு எண்ணெய்  படலங்கள் பரவியுள்ள நிலையில், அதை எப்படி தடயம் எனக்  கூற முடியும் என்று கேள்வி எழுப்பினர்.  மேலும், நீர்வளத்துறை அறிக்கையில் பெருமளவு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினர்.

அப்பகுதி மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்த இயலாத நிலை யில் உள்ளதாக கூறிய தீர்ப்பாயம்,  எவ்வளவு எண்ணெய் சேகரிக்கப் பட்டுள்ளது, எண்ணெய் பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன உண்மை நிலையை அறிய தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் நிபுணர்  குழுவை அமைக்கவில்லை என அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்தது. இதற்கு பதிலளித்த மாசுக்  கட்டுப்பாடு வாரியம், குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விளக்கம் அளித்தது.

இதனை தொடர்ந்து, சென்னை பெட்ரோலிய கழகம் சார்பில் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து எந்த ஒரு கசிவும் ஏற்படவில்லை என்றும், வெள்ளத்தில் பரவி இருக்கக்கூடிய எண்ணெய்யை சேகரிக்கும் பணியை  துவங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.  அப்பகுதியில் 25 ரசாயன  ஆலைகள் இயங்கி வருவதால், எண்ணெய் கசிவுக்கு சென்னை பெட்ரோலிய கழகம் மட்டும் காரண மல்ல என்றும் விளக்கம் அளித்தது. அதே சமயம், இதுபோன்ற நிகழ்வு களை தடுப்பதற்கு தேவையான நடைமுறைகள், ஏற்கெனவே அமலில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

இதனிடையே, இந்த எண்ணெய் கழிவுகள் கழிமுகம் கடலில் கலந் தால் மீனவர்கள் பாதிக்கப்படுவர் என மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், எண்ணெய் கடலில் கலப்பதை தடுக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்க மளிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், தமிழ்நாடு சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை செயலாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர், சென்னை மண்டலத்தின் நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர், தமிழ்நாடு மீன்வளத் துறை இயக்குநர், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் அடங்கிய குழு அமைத்து உத்தர விட்டது.

எண்ணெய் கசிவு ஏற்பட்ட பகுதி களில் டிசம்பர் 11ஆம் தேதி நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், வீடுகளில் படிந்துள்ள எண்ணெய் கசிவு படலத்தின் மாதிரிகளை சேக ரித்து, அதில் கலந்துள்ள ரசாயனம் என்ன என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை யும் கண்டறிந்து, டிசம்பர் 12 அன்று விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் குழுவுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியம்  மேற்கொண்டு வரும் ஆய்வு அறிக்கை யையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.