சென்னை:
காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் திருப்பெரும் புதூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான டி.யசோதா மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
திருப்பெரும்புதூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் டி.யசோதா சென்னையில் ஞாயிறன்று காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தி வருமாறு:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.யசோதா அவர்கள், மறைவுச்செய்தி, மிகுந்த வேதனையும் வருத்தமும் அளிக்கிறது. அவர் திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக நான்குமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓர் எளிய, வறிய குடும்பத்திலிருந்து வந்த யசோதா அவர்கள், காங்கிரஸ் இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு இறுதிவரை எளிய மக்களுக்காக சேவை செய்தவர்; அரசியலில் தன்னலம் கருதாமல் செயல்பட்டவர்; சமூகத்தின் அடித்தட்டு பகுதியிலிருந்து வந்த பெண்மணியான அவர், மக்கள் நலனை முன்னிறுத்தி செயலாற்றிய பெண் அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தக்கவர். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இதயப்பூர்வமான அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.