tamilnadu

img

சாதி, தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் அறைகூவல்

அம்பேத்கரை நினைவு கூறுகிற அனைவரும், சாதி ஒழிப்பு, தீண்டமைக்கு முடிவு கட்டும் போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறைகூவல் விடுத்துள்ளார்.

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் செவ்வாயன்று (டிச.6) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

அம்பேத்கரின் நினைவு நாளன்று, பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமாகவும் உள்ளது. வரலாற்றை சனாதன சக்திகள் பின்னி பிணைத்து வைத்துள்ளார்கள் என்பதற்கு உதாரணமாக இந்நிகழ்வு உள்ளது. மதவெறி, சனாதன சக்திகள் இருக்க கூடாது, அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் சகோதரர்களாக இணைந்து வாழ வேண்டுமென்று அம்பேத்கர் அரசியல் சாசனத்தை உருவாக்கி கொடுத்தார். அவரின் நினைவு நாளில், பாபர் மசூதியை இடித்து மத ஒற்றுமையை எப்போதும் அனுமதிக்க மாட்டோம் என்று ஆர்எஸ்எஸ், பாஜக, சனாதன சக்திகள் சவால்விடுகின்றன.

இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த சிந்தனையாளர், வரலாற்று அறிஞர், சட்ட நிபுணர் என பன்முக ஆளுமை கொண்டவர் அம்பேத்கர். அவர் உயர்த்தி பிடித்த, சனாதன சக்திகளை வீழ்த்துகிற, மதவெறி சக்திகளை அகற்றுகிற, சாதிக்கு ஆணிவேராக உள்ள நிலப்பிரபுத்துவ உணர்வுகளை அறுத்து எரிகிற உணர்வுகளை மேம்படுத்தும் நாளாக இந்நாளை கடைபிடிக்கிறோம்.

பிடிவாதமாக...

அம்பேத்கரை நாவில் மட்டும் கொண்டாடாமல், உள்ளார்ந்த முறையில் அவரின் கொள்கைகளை இந்தியாவில் அமல்படுத்த மார்க்சிஸ்ட் கட்சி பிடிவாதமாக செயல்படுகிறது. சாதி ஒழிப்பு போர்க்களத்தில், தீண்டாமை ஒழிப்பு களத்தில் மற்ற கட்சிகளை விட தலைநிமிர்ந்து நிற்கிற சாதனைகளை மார்க்சிஸ்ட் கட்சி படைத்துள்ளது. அம்பேத்கரை நினைவுகூர்கிற அனைவரும், சாதி கட்டமைப்பு ஒழிப்பு, தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்டும் போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த கே.பாலகிருஷ்ணன், “இன்றைக்குள்ள அரசியலமைப்பு சட்டத்தை அடிப்படையில் ஆர்எஸ்எஸ் - பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை. அரசியலமைப்பு சாசனம் நிறைவேற்றிய அதேநாளில், ஆர்எஸ்எஸ் நிறைவேற்றிய தீர்மானத்தில், இந்திய அரசியல் சாசனத்தை ஏற்கவில்லை. மநுதர்மத்தைதான் அரசியல் சாசனமாக கருதுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதற்கேற்ப அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படைகளை தகர்த்து, சீர்குலைத்து, மநுநீதியை அரசியல் சாசனமாக மாற்ற முயற்சிக்கிறார்கள். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து போராட அழைக்கிறோம்” என்றார்.

உறுதியாக போராடுவோம்!

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கவுரவத் தலைவர் பி.சம்பத் கூறுகையில், “அம்பேத்கருக்கு தேசமே மரியாதை செலுத்துகிறது. அவரின் கருத்துக்கள் சமூகத்தில் மகத்தான பங்களிப்பை செலுத்திக் கொண்டிருக்கிறது. அவர் உருவாக்கிய அரசியல் சாசனம் உலகத்திற்கே முன்னுதாரணமாக உள்ளது. இந்தியாவின் மதச்சார்பின்மைக்கும், ஜனநாயக அமைப்பிற்கும் பலமான அஸ்திவாரமாக உள்ளது.

ஆர்எஸ்எஸ் பாஜக தலைமையிலான அரசு, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையையே தகர்த்து, மதச்சார்பின்மை எதிராக செயல்படுகின்றனர். ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கின்றனர். அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவுகளை, சட்டங்களை நீக்குகின்றனர். உழைக்குக்கும் மக்களுக்கு சாதகமான பிரிவுகளையும் நீக்கியுள்ளனர்” என்றார்.

“இத்தகைய சூழலில் அம்பேத்கரின் கருத்துக்களையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் உயர்த்திப்பிடிப்போம். தீண்டாமை, சாதி ஒழிப்பில் அவரின் பங்களிப்பு ஈடு இணையற்றது. விடுதலைபெற்று 75 ஆண்டுகள் ஆனபிறகும் இந்தியாவில் தீண்டாமை வன்கொடுமை நிலவுகிறது. ஆளும் வர்க்கங்கள் அதனை ஒழிக்க தவறி விட்டன. ஆகவே, ஜனநாயக இயக்கங்கள் ஒன்றிணைந்து சாதி அமைப்பை ஒழித்துக் கட்ட வலுவாக போராட வேண்டி உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், சாதி ஒழிப்புக்காக உறுதியாக போராடுவோம்” என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்வின்போது கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் கே.சுவாமிநாதன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.