சென்னை:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் உயிரிழந்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட வரதராஜூ (77) வெற்றி பெற்றார்.அண்மையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அவர் உயிரிழந்தார்.அவருக்கு கொரோனா பாதிப்பு மட்டுமின்றி உடல் ரீதியாக மேலும் பல தொந்தரவுகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது.எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மறைவுக்கு மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் வெ.சரோஜா, சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் சி. சந்திரசேகரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.