சென்னை, ஜூலை 5 - ஓய்வூதியம் வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்று போக்கு வரத்துக் கழக ஓய்வூதியர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநகர போக்குவரத்து சென்னை கிளை 4வது பேரவை வெள்ளியன்று (ஜூலை 5) சாலிகிராமத்தில் நடை பெற்றது. இந்த பேரவையில், ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் குடும்ப ஓய்வூதிய நிதி 50ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பென்சன் சீரமைப்புக்குழு வின் பரிந்துரையை ஏற்று, அரசு ஓய்வுதியத்திற்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை அனைத்து தொழிலாளர்ளுக்கும் செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தொழிலாளி ஓய்வு பெறும் நாளன்றே பணிக்கொடை, வருங்கால வைப்பு தொகை, விடுப்பு சம்பளம் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க வேண்டும். பணியில் இருந்து ஓய்வு பெற்ற அனைத்து தொழிலாளர்களு க்கும் இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும்போது கிடைக்க வேண்டிய நிலுவைகளின் விவர அறிக்கையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் தீர்மானமாக வலியுறுத்தப்பட்டது. இப்பேரவைக்கு சங்கத்தின் தலைவர் நீலமேகம் தலைமை தாங்கினார். கே.பெருமாள் கொடி யேற்றினார். துணைத்தலைவர் டி.குருசாமி வரவேற்றார். இணைச் செயலாளர் எஸ்.குணசேகரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். பேரவையை தொடங்கி வைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் கே.கர்சன் பேசினார். வேலை அறிக்கையை செயலாளர் கே.வீரராகவனும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் ஏ. முத்துக்குமாரும் சமர்ப்பித்தனர். நல அமைப்பின் தலைவர் கே. கிருஷ்ணன், துணைத் தலைவர்கள் ஏ. ரைமண்ட், எம். சந்திரன், அனைத்து ஓய்வூதியர் கூட்டமைப்பின் சென்னை மாவட்ட பொதுச் செயலாளர் என். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் நிறைவுரையாற்றினார். துணைத் தலைவர் வி. பாலையா நன்றி கூறினார்.
நிர்வாகிகள்
கிளையின் தலைவராக எம்.நீலமேகம், பொதுச் செயலாளராக கே.வீரராகவன், பொருளாளராக ஏ.முத்துக்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.