முதுபெரும் தோழர் நாகரத்தினம் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர்களில் ஒருவரும், மக்கள் மருத்துவமனையை நடத்தி வந்தவருமான தோழர் நாகரத்தினம் தன்னுடைய 92ஆவது வயதில் கிருஷ்ணகிரியில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழர் நாகரத்தினம் இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர். இளம்வயதிலேயே தலைமறைவாக இருந்து இயக்கப் பணியாற்றியுள்ளார். கட்சியின் முதுபெரும் தோழர் டாக்டர் அண்ணாஜியின் துணைவியார் லலிதா மறைவிற்குப் பிறகு அண்ணாஜி அவர்களை திருமணம் செய்து கொண்டார். மக்கள் மருத்துவமனையில் மருத்துவர் அண்ணாஜியுடன் இணைந்து செவிலியர் பயிற்சி பெற்ற நாகரத்தினம் மருத்துவ சேவையாற்றினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றினார். டாக்டர் அண்ணாஜி மறைவிற்குப் பிறகு அவர் நடத்தி வந்த மக்கள் மருத்துவமனையை கட்சியிடம் ஒப்படைத்தார். கட்சி ஊழியர்களை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை செலுத்திய முதுபெரும் தோழர் நாகரத்தினம் மறைவு கட்சிக்கு பேரிழப்பாகும்.
கட்சியின் மாநில செயற்குழு சார்பில் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.