tamilnadu

நீட் தேர்வை குழித் தோண்டிப் புதைப்போம்: தி.க. தலைவர் கி. வீரமணி வலியுறுத்தல்

 சென்னை,ஜன.21-  2023 ஆம் ஆண்டிற்கான ‘நீட்’ தேர்வில்,  தேசிய அளவில் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பின்னணி குறித்து ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் ஆய்வு நடத்தியுள்ளது. அவர்களில் 38 மாணவர்களின் பள்ளி, கல்வி வாரியம், ‘நீட்’ தேர்வுக்காக பெற்ற  பயிற்சி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப் பட்டு உள்ளன. அந்த 38 மாணவர்களில் 29 பேர் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர்கள்; 5 பேர் ஆந்திர மாநில பாடத் திட்டத்திலும், 3 பேர் மராட்டிய மாநிலப் பாடத் திட்டத்திலும், 2 பேர் மேற்குவங்க மாநிலப் பாடத் திட்டத்திலும் படித்தவர்கள்.

அதேபோல், விவரங்கள் சேகரிக்கப்பட்ட 38 பேரில், 29 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்த உயர்ஜாதி மாணவர்கள். 7 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்புகளையும், இருவர் பட்டியலினத்தையும் சேர்ந்தவர்கள்.  சாதனை படைத்த மாணவர்கள் 38 பேரில் 37 பேர் ‘நீட்’ தேர்வுக்கான சிறப்புப்  பயிற்சி பெற்றவர்கள். ஒருவர் மட்டுமே  சிறப்புப் பயிற்சி பெறாதவர். ஆனால், அந்த  மாணவர் புதுதில்லியின் புகழ்பெற்ற பொதுப் பள்ளியில் படித்தவர்.  சாதித்ததாகக் கூறப்படும் அனைவருமே தில்லி, புனே, கொல்கத்தா, நாக்பூர், விஜயவாடா, விசாகப்பட்டினம், சென்னை போன்ற பெருநகரங்களைச் சேர்ந்தவர்கள்.

அனை வருமே பொருளாதார அடிப்படையில் வலி மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இந்த ஆய்வுகளில் இருந்து, ‘நீட்’ தேர்வு என்பது நகர்ப்புறங்களைச் சேர்ந்த, தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து படிக்கும் அளவுக்கு வசதி படைத்த குடும்பங்களின் மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்தது என்பது உறுதியாகி உள்ளது. மேலும் மருத்துவப் படிப்பை ‘நீட்’ தேர்வு ஏழைகளுக்கு எட்டாக்கனியாக்கி விட்டது. மருத்துவக் கல்வி என்பது உயர்ஜாதி யினர், பணக்காரர்கள், நகர்ப்புறத்தார் வயிற்றில் அறுத்துக்கட்டத்தான் என்பதும் வெளிப்படையாகிவிட்டது.

அரசு பள்ளிகளில் படித்தவர்கள் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பொதுவான ‘நீட்’  இந்தியா முழுமையும் உள்ள ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களையும், கிராமப்புற மாணவர்களையும் பாதிக்கும். சமூகநீதி சக்திகள் வலுவாக ஒன்றி ணைந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு ‘நீட்’ டைக் குழிதோண்டிப் புதைக்க முன்வர வேண்டும். இல்லையெனில் ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவக் கனவு மண்மூடிப் போய்விடும், எச்சரிக்கை என திராவிடர்  கழக தலைவர் கி.வீரமணி சுட்டிக்காட்டி யுள்ளார்.