பல்கலைக்கழகத்தின் எல்லைக்குள் அரசியல் உரையாடல்களை தடை செய்யும் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
சேலம், பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் அரசியல் சார்ந்த பரப்புரைகள், உரையாடல்கள் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் பலப்படுத்துவது குறித்தும், அரசியல் அமைப்பு சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் சார்ந்த விழுமியங்களை மாணவர்கள் பெறுவதற்கும் அரசியல் சார்ந்த உரையாடல்கள் மிகுந்த முக்கியத்துவம் உடையது. இதன் காரணமாகவே உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின் கீழ் நியமிக்கப்பட்ட லிங்டோ கமிட்டி பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர் பேரவைத் தேர்தல், செனட், சிண்டிகேட் சார்ந்த பொறுப்புகளில் மாணவர் பிரதிநிதிகளை நியமிப்பது குறித்து பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இத்தகு சூழலில் பெரியார் பல்கலைக்கழகம் அரசியல் சார்ந்த உரையாடல்களில் மாணவர்கள் ஈடுபடுவதற்கு தடை விதித்து சுற்றறிக்கை வெளியிட்டிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இதனை தொடர்ந்து இதுபோன்ற உத்தரவினை இதர பல்கலைக்கழகங்களும் பிறப்பிக்க வாய்ப்புள்ளது. எனவே, பெரியார் பல்கலைக்கழகத்தின் இந்த உத்தரவை திரும்பபெறுவதற்கு தமிழக அரசும், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
மேலும், தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர் பேரவை நடத்துவது, செனட், சிண்டிகேட் போன்ற பொறுப்புகளில் மாணவர்களை பங்கேற்க வைப்பதற்கு உகந்த வகையில் ஜனநாயக நடைமுறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த முன்வர வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கேட்டுக் கொள்கிறது.
இதர மாநிலங்களில் மாணவர் பேரவைத் தேர்தல்கள் நடந்து கொண்டுள்ள சூழ்நிலையில், தமிழ்நாட்டில் பல்லாண்டுகளாக மாணவர் பேரவைத் தேர்தல்கள் நடைபெறாமல் இருப்பது மாணவர்களிடையே ஜனநாயக கடமையினை புரிந்து கொள்ள உள்ள வாய்ப்பினை தட்டிப்பறிப்பதாக உள்ளது என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.