சென்னை,மார்ச் 29- கொரோனா வைரஸ் பாதிப்பால் அசாதாரண சூழ்நிலை நிலவுகின்றது.இந்நிலையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்தும் தமிழக அரசின் வேளாண் துறை உத்தரவை திரும்பப்பெற்று, தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு தோட்டத் தொழிலாளர் ஒருங்கிணைப்புக் குழு (சி.ஐ.டி.யு.) சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முதல்வருக்கு அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.சி.கோபிகுமார் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பால் தற்போது நாடு ஒரு அசாதாரண சூழ்நிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் பல்வேறு கடுமையான முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தருகின்றனர். மாநில அரசு தமிழக மக்களை பாதுகாத்திட பல்வேறு முயற்சிகள் எடுத்து வருவது பாராட்டுதலுக்குரியது. அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள நீலகிரி, கோவை, சேலம் , தேனி , திருநெல்வேலி, திண்டுக்கல், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் உள்ள தேயிலை, ரப்பர் மற்றும் காபி தோட்டங்களில் பணி புரியும் தொழிலாளர்களை பாதுகாப்பது அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்குவது என்பது அரசின் கடமையாகும்.
தற்போது தமிழக அரசு கடிதம் எண் .90/APC&PS/2020DT 28.03.2020 மூலமாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டத் தொழில் வழக்கம் போல் பாதுகாப்பு சாதனங்களுடன் வேலைகள் தொடங்கலாம் என்றும் அறிவித்துள்ளது. இது முழுமையாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள ஆணைகளுக்கு எதிரானதாகும். வாழ்க்கையின் விளிம்பு நிலையில் தினக்கூலிகளாக உள்ள தோட்டத் தொழிலாளர்களின் உயிரை பாதுகாக்காமல் தேயிலை தொழில் துவங்குவது தொழிலாளர்களை வேலைக்கு வரச் சொல்லுவது என்பது தற்போதைய சூழ்நிலைக்கு சரியானதுமல்ல. இது சட்ட விரோதமானதாகும். தேயிலை அத்தியாவசிய பொருள் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது . தேயிலையை விட தொழிலாளர்கள் உயிர் மிகவும் முக்கியமானது. இதே போன்ற ஆணை அசாம் மாநிலத்திலும் வழங்கப்பட்டு பின்னர் திரும்பப்பெறப்பட்டது என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மத்திய மாநில அரசுகளின் ஆணைப்படி ஊரடங்கு கால வேலையில் அனைத்து தொழிலாளர்களும் வீடுகளில் இருக்க வேண்டும் என்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும் என்பதை முழுமையாக தோட்ட முதலாளிகள் சங்கம் நிராகரிக்கின்றன.
ஊரடங்கு நிலையில் வெளியூரில் இருக்கும் தோட்ட தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர், தனிமைப்படுத்துதல் என்பதை முழுமையாக அமல்படுத்த வேண்டிய நிலையில் தோட்டத் தொழிலை துவக்குவது சரியல்ல என்று கருதுகிறோம். ஆகவே தாங்கள் உடனடியாக தலையிட்டு தமிழக அரசு வேளாண் துறை வெளியிட்டுள்ள கடிதம் எண்o .90/APC&PS/2020DT 28.03.2020-ஐ உடனடியாக திரும்ப பெற வேண்டும்.தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியம் மற்றும் முன்பணம் ஒரு மாத ஊதியம் வழங்கிட ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.