tamilnadu

img

முதலீடுகள் குறித்து முதல்வரின் பொய் அம்பலமாகிவிட்டது... மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை:
முதலீடுகள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்லி வருவதாகவும் அது அம்பலமாகி விட்டதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்  வெளியிட்ட அறிக்கையில், ‘நூற்றுக்கணக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுவிட்டோம்’; ‘கோடிக் கணக்கில் முதலீடுகளை ஈர்த்துவிட்டோம்’ என்று, திரும்பத் திரும்பப் பொய்களையே சொல்லி, ஜம்பம் பேசி வந்த முதல்வர் பழனிசாமியின் முகமூடியை, 28.12.2020 நாளிடப்பட்ட ஆங்கில நாளேடு ஒன்று, கழற்றித் தரையில் வீசிவிட்டது.அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட முதலீடான 1 லட்சத்து 90 ஆயிரம் கோடியில் பெற்றது வெறும் 9.4 சதவீதம் மட்டும்தான்; அதாவது, வெறும் 18 ஆயிரத்து 188 கோடிதான் என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆகவே, கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் பெற்ற முதலீடுகள், ஆண்டுக்கு 1,800 கோடி ரூபாய்தான் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
இரு உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டுக்குக் கூட்டமாகப் படையெடுத்தது, உள்ளிட்ட நாடகங்களின் மூலமாக இதுவரை போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எல்லாம் வெத்து வேட்டு! எல்லாமே வீண் விளம்பரம் என்பது நிரூபணமாகி விட்டது.

‘கொரோனா காலத்திலும் தொழில் முதலீடுகளை ஈர்த்ததில் முதல் மாநிலம்’ என்று அரசுப் பணத்தில் அதாவது, மக்களின் வரிப் பணத்தில், பத்திரிகைகளில் இன்று இரண்டு முழுப்பக்க விளம்பரம் கொடுத்துள்ள பழனிசாமியின் சாயம் வெளுத்துவிட்டது; வேடம் கலைந்துவிட்டது! முதலீடுகளை ஈர்க்கத் திறமையில்லாத இந்த அரசுக்கு முழுப்பக்க விளம்பரம் ஒரு கேடா?”. என்றும்  மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

;