tamilnadu

img

மநுநூலை எரிப்பது சாதி எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியே... தொல்.திருமாவளவனுக்கு ஆதரவாக பெண்கள் அமைப்புகள் கூட்டாக அறிக்கை....

சென்னை;
இந்து பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக தொல்.திருமாவளவன் எம்.பி., மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அதனடிப்படையில் அவர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைகிறோம் என்றும் இந்தச் சூழலில் மநுஸ்மிருதி குறித்து அவர் முன்வைத்துள்ள விமர்சனங்களை வரவேற்றும் பெண்கள் அமைப்புகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவாக பெண்கள் அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

 “இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்திலிருந்தே பல்வேறு தனிநபர்கள் மற்றும் சமூக இயக்கங்களின் கடுமையான விமர்சனத்திற்கு மநுஸ்மிருதி உள்ளானது. சாதி எதிர்ப்பு - ஜனநாயக உரிமைக்கான இயக்கங்களில் தங்களை இணைத்துக் கொண்ட ஜோதிராவ் பூலே, அயோத்திதாச பண்டிதர், எம். சி. ராஜா, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் தர்மானந்தா கோசாம்பி போன்ற பல சிந்தனையாளர்கள் இதில் அடங்குவர்.இதே போல பெண்கள் இயக்கங்கள் இந்த நாட்டில் உருவானதிலிருந்து பெண்களும் மநுஸ்மிருதியை எதிர்க்கும் பரப்புரையில் முன்னணியில் நின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.பெண்களையும் இந்த நாட்டின் பெருவாரியான உழைக்கும் மக்களான சூத்திரர்களையும் அடிமைப்படுத்துவதை நியாயப்படுத்திய மநுநூலைக் கடுமையாக இவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

மநுஸ்மிருதி, குறிப்பாக அதன் ஒன்பதாவது அத்தியாயம் சமரசமின்றி வலுவாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று.பெண்கள் மீது துளியளவும் மரியாதை இல்லாதவராக அந்நூலின் ஆசிரியர் இருந்துள்ளார் என்று அதைப் படிக்கும் போது தெளிவாகிறது.
பெண்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்லர்; பலரோடு பாலுறவு கொள்ளக்கூடியவர்கள், எந்த மனிதரோடும் செல்லக்கூடியவர்கள்; பெண்களின் இயல்பு மிகவும் இழிவானது; எனவே அவர்கள் சாஸ்திரங்களைத் தொடக்கூடாது. அவர்கள் வாழ்நாள் முழுவதும் தந்தையர், கணவன்மார், மகன்களால் எப்போதுமே கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட வேண்டியவர்கள் என்றெல்லாம் இந்த அத்தியாயம் பெண்களை மிகவும் இழிவாகக் குறிப்பிடுகிறது.

மநுநூலை இந்து சமயத் திருநூலாகப் பார்க்கின்றவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்களைப் புகழ்கின்ற ஒரு சில மேற்கோள்களை மட்டும் குறிப்பிட்டு, அது இன்றியமையாதது எனப் புகழ்வது வழமையாக உள்ளது. ஆனால் இரு பிறப்பாளர்களான பிராமணப் பெண்களை மட்டுமே மநுஸ்மிருதி புகழ்வதை; இந்த நூலை படிக்கும் எவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். எனவே உயர்சாதி பெண்கள் மட்டுமே நல்ல மனைவியராகவோ, தாய்மாராகவோ இருக்க முடியும் என்ற மோசமான நிலையிலிருந்து இதனை உணர்ந்து கொள்ளலாம்.

 சாதி கட்டமைப்பைத் தக்கவைப்பதற்கான பெண்களையும், சூத்திரர்கள் என்று சொல்லப்படுவோரையும் மநுஸ்மிருதி மிக இழிவாகப் பார்ப்பதை அப்போதிலிருந்தே பல இந்து பெண்களும், இந்துக்களாக பிறந்து பின்னர் நாத்திகர்களாக - கடவுள் மறுப்பாளர்களாக மாறியவர்களும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.இந்திய அரசமைப்பு நிர்ணய சபையில் அம்பேத்கர் பேசும் போதும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற இந்திய அரசமைப்பின் மதிப்பீடுகளுக்கு எதிராக மநுஸ்மிருதி எவ்வாறு உள்ளது என்பதை தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே, மநுஸ்மிருதியை விமர்சிக்கும் முயற்சிகளை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். மநுஸ்மிருதியை எரிக்கும் போராட்டம் போன்றவை சாதி எதிர்ப்பு போராட்டங்களின் நியாயமான ஒரு பகுதியாக அமையும் என்று கருதுறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.