சென்னை:
சென்னையில் மூதாட்டி வீட்டு முன்பாக வேண்டும் என்றே சிறுநீர் கழித்து அராஜகத்தில் ஈடுபட்ட மருத்துவர் சுப்பையா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக்கப்பட்டுள்ளார். இதற்கு திமுக, காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம். கடோச்சை மத்திய அரசு நியமித்திருக்கிறது. இவர் தற்போது புதுவை ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக உள்ளார்.மேலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 4 மருத்துவர்கள் கொண்ட உறுப்பினர் குழுவும் அமைக்கப் பட்டுள்ளது. இதில் சென்னை மருத்துவர் சண்முகம் சுப்பையாவும் ஒருவர். இவர் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி தலைவராக உள்ளார்.
மேலும், கார் நிறுத்துவது தொடர்பாக, தனது வீட்டின் அருகில் வசித்து வந்த மூதாட்டி ஒருவரது வீட்டு முன்பாக வேண்டும் என்றே அநாகரிகமாக சிறுநீர் கழித்த சர்ச்சையில் சிக்கியதோடு, பயன்படுத்திய முக கவசங்களை அவர் வீட்டின் முன்பு எறிந்தவர் மருத்துவர் சண்முகம் சுப்பையா. இதனால் சென்னை காவல்துறையினர் இவர் மீது வழக்கும் பதிவு செய்திருக்கின்றனர்.தற்போது அந்த சண்முகம் சுப்பையாவை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. சமூக வலைதளங்களில் சண்முகம் சுப்பையாவுக்கு எதிரான பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் தமது ட்விட்டர் பக்கத்தில், “எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 3 எம்.பிக்கள் குழுவை அறிவிக்கவில்லை; ஆனால் சிறுநீர் சர்ச்சையில் சிக்கிய சண்முகம் சுப்பையாவை நியமித்திருக்கிறார்கள். இது பாஜகவின் ஜனநாயக விரோத செயல் என கூறியுள்ளார்.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது அவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்பதற்காகவா அல்லது பெண்மையை இழிவுபடுத்தியதற்காக கொடுக்கப்படும் பரிசா? இது தான் மனுசாஸ்த்திரத்தின் வழி ஆட்சியோ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமாரும் இது தொடர்பாக எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், பெண்ணை துன்புறுத்திய குற்றச் சாட்டில் வழக்கு பதியப்பட்டவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை யின் உறுப்பினராக நியமனம்: இது பெண்களை அவமதிப்பதில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
எம்பிக்கள் பெயரை புறக்கணித்த பாஜக
இந்த எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர் குழுவில் தமிழக எம்.பி.க்கள் யாருமே நியமிக்கப் படாமல் காலி இடம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கும் மதுரை மற்றும் அதனை சுற்றிய திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் எம்.பிக்கள் இருக்கின்றனர்.இப்படி தமிழக எம்.பி.க்கள் இருந்தும் கூட மத்திய அரசு ஏன் காலி இடமாக அறிவித்தது என்பதுதான் கேள்வி. காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறுநீர் சுப்பையா விவகாரத்துடன் தமிழக எம்.பி.க்கள் புறக்கணிப்பும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
குஷ்பு கருத்து என்ன?
மனுஸ்மிருதியில் பெண்கள் இழிவுபடுத்தப் பட்டிருக்கின்றனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். ஆனால் பெண்களைத்தான் திருமாவளவன் இழிவுபடுத்திவிட்டதாக குஷ்பு உள்ளிட்டோர் கூறி போராட்டம் நடத்துகின்றனர்.மனுஸ்மிருதியில் சொல்லப்பட்ட இழிவான கருத்துகளை திருமாவளவன் எடுத்துக் கூறினார் என்கிற வாதத்தை ஏற்கவில்லை. இதனை நிராகரித்து குஷ்பு 8 பேருடன் போராட்டம் நடத்தினார். அப்போது அவரை கைது செய்து சொகுசு விடுதியில் காவல்துறையினர் தங்க வைத்தது சர்ச்சையானது.
இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான உறுப்பினர் குழுவில் சென்னை டாக்டர் சுப்பையா நியமிக்கப்பட்டிருப்பது தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டதை சுட்டிக் காட்டியதற்காக திருமாவளவன், பெண்களை கொச்சைப்படுத்தியதாக குதிக்கிறார் குஷ்பு. இங்கே நிகழ்காலத்தில் வயதான மூதாட்டியை கொடுமைப் படுத்தி அவரது வீட்டு முன்பு மனசாட்சியே இல்லாமல் ஒரு மருத்துவர் என்றும் நினைக்காமல் சிறுநீர் கழித்த சேட்டைபிடித்த சுப்பையாவின் நியமனத் துக்கு குஷ்பு என்ன கருத்து சொல்ல போகிறார்? தமிழகமே அவரது கருத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.