சிறுபான்மை மக்களை இழிவுபடுத்தும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சுக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.அருணன், க.உதயகுமார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
மணிப்பூரில் கிறிஸ்தவ பழங்குடியினருக்குச் செய்யப்பட்ட கொடூரங்களைக் கண்டிப்பதற்கான கூட்டம் என்ற பெயரில் தமிழ்நாட்டு கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் அநாகரிகமாகத்தாக்கிப் பேசியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர்களை "சாத்தானின் பிள்ளைகள்" என்றும், நாட்டில் நடந்த அநியாயங்களுக்கு எல்லாம் இவர்களே பொறுப்பு என்றும் அபாண்டமாக குற்றம் சாட்டியிருக்கிறார். அடுத்து தந்துள்ள ஒரு பேட்டியிலும் இதை நியாயப்படுத்தியிருக்கிறார். சிறுபான்மை மக்களை இழிவுபடுத்தும், மக்கள் ஒற்றுமையை சிதைக்க முனையும் இந்தப் பேச்சை, பேட்டியை மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது.
திமுக அணிக்கு சிறுபான்மையோர் வாக்களிக்கிறார்கள் என்றே இப்படி வன்மத்தையும் வெறுப்பையும் கக்கியிருக்கிறார் சீமான். இதைத் தனது பேச்சிலும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். இந்தியாவில் மத நல்லிணக்கத்தை கெடுத்து, சிறுபான்மையோரின் வாழ்வில் நிரந்தர அச்சத்தை உருவாக்கி வருவது ஆர்எஸ்எஸ்சும், அதன் அரசியல் பிரிவான பாஜகவும். தமிழ்நாட்டில் அது அதிமுக முதுகில் ஏறி சவாரி செய்து வருகிறது. அதை முறியடிக்கும் பலம் திமுக அணிக்கே உள்ளது என்பதை உணர்ந்து அந்த அணிக்கு வாக்களிக்கிறார்கள் சிறுபான்மையோர். இதைத்தான் மகாத் தவறு என்கிறார் சீமான்.
இவரின் நோக்கம் தெளிவானது. பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதற வேண்டும், அதன் மூலம் பாஜக அணி வெற்றி பெற வேண்டும் என்பது. இந்த சதி வேலைக்கு இணங்காமல் சிறுபான்மையோர் திமுக அணிக்கு வாக்களிப்பதே இவரின் ஆத்திரத்திற்கு காரணம். அதனால்தான் "சாத்தானின் பிள்ளைகள்" என்று அவர்கள் நெஞ்சம் நோகும் படுமோசமான வசவு மொழியை உதிர்த்திருக்கிறார்.
சங் பரிவாரமானது குஜராத்தில் முஸ்லிம்களை வேட்டையாடியது, காஷ்மீரிலும் அவர்களையே குறி வைத்தது, இப்போது மணிப்பூரில் கிறிஸ்தவர்களை வேட்டையாடுகிறது. இப்படியாக மக்களை மதரீதியாகப் பிளந்து மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வரப் பார்க்கிறது. மீண்டும் வந்தால் நமது குடியரசு சாசனமும், மதச்சார்பற்ற அரசு கோட்பாடும், சிறுபான்மையோர் மத உரிமைகளும், எஸ்சி-எஸ்டி-பிசி இடஒதுக்கீடுகளும் பறிபோய்விடும். "இந்து ராஷ்டிரம்" என்ற பெயரில் மநுராஷ்டிரம், சனாதன ராஜியம் இங்கே நிலைநிறுத்தப்படும்.
இது பற்றியெல்லாம் கவலைப்படாது எதிர்க்கட்சிகளின் "இந்தியா" அணியையும், ஆளும் பாஜகவின் மதவெறி அணியையும் ஒன்றாகச் சித்தரித்து "இந்தியா"விற்கு வாக்களிக்காதீர் என்று சிறுபான்மையோரை வஞ்சிக்கப் பார்க்கிறார் சீமான். இவரின் இந்த உள்ளடி வேலைக்கு இரையாக வேண்டாம் என்று சிறுபான்மையோரை மட்டுமல்ல, மனிதநேயர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது மேடை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.