tamilnadu

img

பம்பை ஆற்றில் மூழ்கி மாணவர் 2 பேர் பலி

விழுப்புரம்,டிச.25- விழுப்புரம் அருகே பம்பை ஆற்று தடுப்பணையில் குளித்துக்கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.  விழுப்புரம் அருகே பானாம்பட்டு ராகவேந்திரா கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் உதயா (13), விழுப்புரம் மணிமேகலை தெருவை சேர்ந்த அய்யப்பன் மகன் பாலசுப்பிரமணி (14). இவர்களில் உதயா விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பாலசுப்பிரமணி பீமநாயக்கன்தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும் 9 ஆம் வகுப்பு படித்து வந்தனர்.  தற்போது பள்ளியில் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் தனது நண்பர்கள் 4 பேருடன் விழுப்புரம்  பம்பை ஆற்றில் குளிக்கச் சென்றனர். அங்குள்ள தடுப்பணையில்  6 பேரும் இறங்கி குளித்துள்ளனர். இவர்களில் 3 பேர் மட்டும் வெளியே வந்தனர். மற்ற 3 பேர் சேற்றில் சிக்கிக்கொண்டனர்.  இதைப்பார்த்த சக நண்பர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூக்குரல் எழுப்பி சத்தம் போட்டனர். இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்த சில இளைஞர்கள் சென்று ஆற்றில் மூழ்கிய 3 பேரையும் மீட்க முயன்றனர். இதில் விழுப்புரம் மணிமேகலை தெருவை சேர்ந்த ராம்குமார் மகன் சங்கர் (13) என்பவரை மட்டும் மீட்டனர்.  அப்போது அவர் மயங்கிய நிலையில் இருந்ததால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சங்கருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். உதயா, பாலசுப்பிரமணி இருவரையும் காப்பாற்ற முடியவில்லை.  பின்னர், காவல் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு இருவரின் உடலையும் மீட்டெடுத்தனர்.