tamilnadu

img

100 யூனிட் மின்சாரம் ரத்து இல்லை மின் வாரியம் விளக்கம்

சென்னை, மே 17 - தமிழ்நாடு மின்சார வாரியம் மின் தேவையை சமாளிக்க தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்கிறது. அனல் மின் நிலையம், நீர் மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் மட்டுமின்றி காற்றாலை மூலமும் மின்சாரம் பெறப்படுகிறது.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, மின் தேவை இந்த வருடம் 3 ஆயிரம் மெகாவாட்டுக்கு கூடுதலாக அதிகரித்துள்ளது. இது மின் வாரியத்திற்கு மேலும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படு கிறது. இதனால் வாரியத்திற்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. 

எனவே, ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருப்பதை இணைப்பதற்கு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு பணியை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், 100 யூனிட் மின்சாரம் ரத்து  செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியா னது. இது ஏழை, எளிய மக்களை அதிர்ச்சி அடைய செய்தது.  இதுகுறித்து, தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் மின்பகிர்மான கழகம் விளக்கம் அளித்துள்ளது. 

வதந்தியை நம்பாதீர் !
அதில், ‘அனைத்து வீடுகளுக்குமான 100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி மின்வாரியம் செயல்படுகிறது. அந்த உத்தரவில் வாடகை வீட்டுக்காரர்களுக்கு மானியத்தில் எந்த இடையூறும் இருக்கக் கூடாது என தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. அதேபோல் ஒரு வீட்டின் உரிமையாளர் அவரின் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் 100 யூனிட் மானியம் தொடரும்.

ஒரே பெயரில் பல இணைப்புகள் வைத்துள்ளவர்களுக்கு தான் இதனால் பாதிப்பு ஏற்படும். ஏழை, நடுத்தர மக்களுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் “’வீட்டு உபயோகத்திற்கு இரு மாதங்களுக்கு 500 யூனிட்களுக்கு மேல் ஆனால் 100 யூனிட் இலவசம் இல்லை’ என்று மொபைல் போன்களுக்கு வரும் எஸ்.எம்.எஸ் போலியானது” என்றும் “இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம்” என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் ஆப்-இல் மின் கட்டணம் செலுத்தலாம்!
தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணம் செலுத்துவதை எளிதாக்கியுள்ளது. அதன்படி, “’வாட்ஸ் ஆப்’ மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகம் செய்திருக் கிறோம். 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம்  பயன்படுத்தும் நுகர்வோர்கள் யுபிஐ வாயி லாக கட்டணத்தை செலுத்தலாம். மின்சார வாரியத்தின் இலச்சினை மற்றும் பச்சை குறியீடு, 9498794987 என்ற செல்பேசி எண் ஆகியவற்றை உறுதி செய்து கொண்டு பணம் கட்டலாம்” என்று தெரிவித்திருக்கிறது.