1687 - மிகப்புகழ்பெற்ற பண்டைய கிரேக்கக் கட்டிடமான பார்த்தினன், மோரியப் போரில் சேதமுற்றது. வெனிஸ் குடியரசுக்கும், ஒட்டோமான் பேரரசுக்குமிடையிலான இப்போரில், மோரியாவை வெனிஸ் குடியரசு கைப்பற்றியதால் இது மோரியப்போர் என்று குறிப்பிடப்படுகிறது. மோரியா என்பது தற்போதைய கிரீசின் தென்பகுதியிலுள்ள பெலப்பனீஸ் தீபகற்பத்தின் அக்காலத்திய பெயர். புனித ரோமப் பேரரசின் ஹாப்ஸ்பர்க் அரசர்கள், போலந்து-லிதுவேனியா, வெனிஸ், ரஷ்யா ஆகியவை அடங்கிய புனிதக்கூட்டணிக்கும், ஒட்டோமான் பேரரசுக்குமிடையே 1683-99 காலத்தில் நடைபெற்ற பெரும் துருக்கியப்போரின் ஒருபகுதியாக இப்போர் நடைபெற்றது.
பார்த்தினன் என்பது அறிவு, கைவினைத்திறன், போர் ஆகியவற்றின் கிரேக்கக் கடவுளான ஏதெனா-வின் ஆலயமாகும். பழைய கிரேக்கக் கட்டிடக்கலையின் எஞ்சியுள்ள அடையாளங்களில் மிகமுக்கியமானதாகக் குறிப்பிடப்படும் பார்த்தினன், கி.மு.447இல் தொடங்கப்பட்டு, 438இல் கட்டி முடிக்கப்பட்டாலும், அழகுபடுத்தும் பணிகள் 432வரை தொடர்ந்தன. பார்த்தினன் கட்டப்பட்ட இடத்தில் ஏற்கெனவே ஏதனாவுக்கு ஓர் ஆலயம் இருந்து, கி.மு.480இல் பாரசீகப் படையெடுப்பில் அழிக்கப்பட்டது. கிரேக்கக் கட்டிடக்கலையின் டோரிக் முறைப்படி கட்டப்பட்ட பார்த்தினன், கிரேக்கச் சிற்பக்கலையின் மிகச்சிறந்த சிற்பங்களைக்கொண்டிருந்தது. கிரேக்கத்தின் நடு, மேற்குப்பகுதிகளிலிருந்து டோரிக், கிழக்குப்பகுதி யிலிருந்து அயானிக், பின்னாளில் உருவானதும், மூன்றிலும் அதிக அழகாக அலங்கரிக்கப்பட்டதுமான கோரிந்தியன் ஆகிய முறைகள் கிரேக்க கட்டிடக்கலையில் காணப்படுகின்றன.
பெரும்பாலான கிரேக்க ஆலயங்களைப் போலவே, நகரின் கருவூலமாகவே பயன்படுத்தப்பட்டுவந்த பார்த்தினன், கி.பி.6ஆம் நூற்றாண்டுகாலத்தில் கன்னி மேரிக்கான கிறித்தவ தேவாலயமாக மாற்றப்பட்டது. 1400களின் இடைப்பகுதி யில், ஏதென்சை ஒட்டோமான் துருக்கியர்கள் கைப்பற்றி யதையடுத்து, இது ஒரு மசூதியாக மாற்றப்பட்டது. பார்த்தினன் அமைந்திருந்த கோட்டை நகரான ஏதெனியன் அக்ரோபொலிஸ் என்பதன் வெடி மருந்துக் கிடங்காக இதனை துருக்கியர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், 1687 செப்டம்பர் 26 அன்று, ஃபிலோபாப்பஸ் மலையிலிருந்து வெனிஸ் படையினர் சுட்ட குண்டு விழுந்ததில், இதன் ஒரு பகுதி சேதமுற்றது. உயரமான என்ற பொருளுடைய அக்ரோன், நகரம் என்ற பொருளு டைய பொலிஸ் ஆகிய கிரேக்கச் சொற்களிலிருந்து உருவான அக்ரோபொலிஸ் என்பது, கிரேக்கத்தின் கோட்டை நகரங்களின் பொதுவான பெயர் என்றாலும், பார்த்தினன் அமைந்துள்ள ஏதென்சின் அக்ரோபொலிசைக் குறிக்கவே அச்சொல் தற்போது பயன்படுத்தப்படுகிறது. 1975இல் தொடங்கிய பார்த்தினன் உள்ளிட்ட கிரேக்கக் கட்டிடக்கலைச் சின்னங்களை மறுசீரமைக்கும் பணி 2020இல் முடிவுறும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.