பத்திரிகையாளர் கஷோக்கி கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
ஜமால் கஷோகி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர். இவர், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபிக் மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர். துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்திற்கு சென்ற அவரை, மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது.
மேலும், ஜமால் கொலை செய்யப்பட்டதின் பின்னணியில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாகவும் கூறியது. ஜமால் கொலை தொடர்பாக ஐ.நா சபை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் ஜமாலின் மரணத்தில் சவுதி இளவரசருக்குப் பங்கு இருக்கிறது என்று தெரிவித்திருந்தது. ஜமால் மரணத்துக்கு சவுதி தலைவர் என்ற பொறுப்பில் தான் முழு பொறுப்பு ஏற்பதாகவும், ஆனால் ஜமால் கொலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஃப்ரன்ட்லைன் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்திருந்தார்.
உலக நாடுகள் பலவும் சவுதி அரேபியாவுக்கு கண்டனங்களைத் தெரிவித்தன. இந்தச் சம்பவம் தொடர்பாக சவுதி அரேபியா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், ஜமால் கஷோகி கொலை வழக்கில் தொடர்புடையவர்களில் 5 பேருக்கும் தூக்கு தண்டனையும், 3 பேருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.