கோவை செயல்பட்டு வந்த சரவணா செல்வரத்தினம் கடையில் பார்க்கிங் இடத்தை குடோனாக பயன்படுத்தியது, திறந்த வெளி பகுதி விடாமல் இருந்தது ஆகிய காரணங்களுக்காக சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவின் பேரில் உள்ளுர் திட்ட குழும அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து இன்று அதிகாலையில் சீல் வைத்தனர்.
கோவை ஒப்பணக்கார வீதியில் சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் செயல்பட்டு வருகின்றது. தரைத்தளம் மற்றும் 5 மாடிகளுடன் 2600 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள இந்த வணிக வளாகத்தில் துணிக்கடை, பாத்திரகடை, வீட்டு உபயோக பொருட்கள், குழந்தைகளுக்காக விளையாட்டு பொருட்கள் என தனித்தனியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தினமும் பல்லாயிரகணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த வணிக வளாகத்தில் பார்க்கிங் பகுதிக்கான இடத்தை குடோனாக பயன்படுத்தி வருவதாகவும்,ஒவ்வொரு தளத்திலும் தனித்தனியாக திறந்த வெளி பகுதி விடாமல் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.இந்த வழக்கில் அனுமதி பெறப்பட்டதற்கு முரணாக கட்டப்பட்டுள்ள வணிக கட்டடத்திற்கு சீல் வைக்க கடந்த மார்ச் 12ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இன்று நகர ஊரமைப்பு சட்டத்தின் விதிமுறைகளின்படி ஒப்பணக்கார வீதியில் உள்ள சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்துக்கு உள்ளூர் திட்டக்குழுமம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து இன்று காலை சீல் வைத்தனர்.
மேலும் இந்த வளாகத்தினுள் பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது எனவும் அறிவிப்பும் பொது மக்கள் பார்வைக்காக ஒட்டப்பட்டுள்ளது .இன்று காலை சீல் வைக்க அதிகாரிகள் வந்த போது கடையில் இருந்த ஊழியர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எனினும் போலீசார் பாதுகாப்புடன் சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.