ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க மறுத்த ஹோட்டல் நிர்வாகத்தின் போக்கை எதிர்த்து தொழிலாளர் நீதிமன்றத்தில் முறையிட்டு சிஐடியு ஹோட்டல் சங்கம் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை பெற்றுத்தந்துள்ளது. இது தொழிலாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை காந்திபுரம் சித்தாபுதூர் சாலையில் ஸ்ரீ ஆர்வி ஹோட்டல் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சிஐடியு ஹோட்டல் சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளனர். சங்கமும் ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட பல்வேறு சட்ட சலுகைகளை பெற்று தந்துள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்கள் வேலை, வருவாயின்றி உள்ள நிலையில் இவர்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என நிர்வாகத்திடம் சிஐடியு முறையிட்டது. ஆனால் இதற்கு நிர்வாகம் மறுத்துள்ளது. இதனையடுத்து கோவை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சிஐடியு ஹோட்டல் சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.ராஜா, துணைதலைவர் ஆறுமுகம், கிளை தலைவர் பாரதிராஜ் உள்ட்ட நிர்வாகிகளும், நிர்வாகத்தரப்பில் இருந்தும் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஊரடங்கு காலத்திற்கு ரூ .15 ஆயிரம் ஊதியம் தருவதாக ஹோட்டல் நிர்வாகம் ஒப்புகொண்டது. இதனை தொழிற்சங்கமும் ஏற்றது. இதனையடுத்து தொழிலாளர்கள் அனைவருக்கும் ஹோட்டல் நிர்வாகம் உடனடியாக ஊதியம் வழங்கியது. இது ஹோட்டல் தொழிலாளர்கள் மத்தியில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.