திருப்பூர், மே 11 -பல்லடம் ஒன்றியம் பூமலூர் ்ஊராட்சி நடுவேலம்பாளையம் பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வராத நிலையில் இப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.நடுவேலம்பாளையத்தில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு அத்திக்கடவு திட்டத்தில் திருச்சி சாலையில் உள்ள பிரதான விநியோகக் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. வாரத்தில் நான்கைந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் நடைபெற்று வந்தது. ஆனால் கோடை காலம் தொடங்கிய நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக இங்கு குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை. அத்துடன் இங்கு வேறு ஆழ்குழாய் தண்ணீர் வசதியும் இல்லை. அத்துடன் ஊருக்குள் இருக்கும் கிணற்றிலும் தண்ணீர் வற்றிவிட்ட நிலையில் இப்பகுதி மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.இந்நிலையில் சனியன்று காலை இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 200 பேர் நடுவேலம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பல்லடத்தில் இருந்து சோமனூர் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் இந்த மறியல் நடைபெற்ற நிலையில், மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் அங்கு வந்தனர். பல்லடம் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.நடுவேலம்பாளையம் குடிநீர் பிரச்சனைக்கு ஒரு வார காலத்தில் தீர்வு காண்பதாகவும், தற்காலிக ஏற்பாடாக மாலைக்குள் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாகவும் அவர் உறுதியளித்தார். இதையடுத்து இந்த மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம் கூறுகையில், குடிநீர் வடிகால் வாரியம் அதிகாரிகள் நடுவேலம்பாளையத்துக்கு 60ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்குவதாக கூறுகின்றனர். ஆனால் நிர்வாகக் குளறுபடி காரணமாக இப்பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் கிடைப்பதில்லை. நான்கைந்து நாட்களுக்கு ஒரு முறை சில குடங்கள் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. அதைக் கொண்டுதான் எல்லா தேவைகளையும் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. தற்போது அதிகாரிகள் ஒரு வார காலத்தில் குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாகத் தெரிவித்துள்ளனர். உரிய தீர்வு கிடைக்காவிட்டால் மறுபடியும் மக்களைத் திரட்டி சக்திமிக்க முறையில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.