திருவனந்தபுரம், ஆக.30- தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சொப்னா சுரேஷுடன் ஜனம் டிவியின் ஒருங்கிணைப்பு ஆசிரியர் அனில் நம்பியாருக்கு தொடர்பு இருப்ப தாக தெரியவந்ததை அடுத்து அவசர அவசரமாக பாஜக தலைவர்கள் அந்த தொலைக்காட்சியை கைகழுவியுள்ளனர். இது புரியாத புதிர் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். இதுகுறித்து சனிக்கிழமையன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவர் மேலும் கூறியதாவது: விசாரணை சரியான திசையில் அதன் போக்கில் முன்னேறிச் செல்வதாக நான் ஏற்கனவே கூறியிருந்தேன். அதற்கு மாறாக மற்றொரு சித்திரம் தீட்ட முயன்ற போது தான், விசாரணையை மேலும் செல்ல விடுங்கள் அப்போது யாருடைய இதயத் துடிப்பு அதிகரிக்கிறது என்பதைப் பார்ப்போம்’ என்று கூறினேன். விசாரணை நடக்கட்டும். ஆனால் அதற்குள்ளாக ஜனம் டிவி போன்ற ஒரு தொலைக்காட்சி சானலை கைகழுவும் நிலை எதனால் ஏற்பட்டது என்று எவ்வளவு யோசித்தாலும் புரிந்து கொள்ள முடிய வில்லை அது ஒரு அளவு கடந்த செயலாகி விட்டது. மக்கள் முன்பு அப்படி பேசிய வர்கள் இப்போது ஏளனம் செய்யப்படு கிறார்கள். அனைவருக்கும் உண்மை தெரியும் என்று முதல்வர் கூறினார். ஏற்கனவே, பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், ஜனம் டிவியுடன் பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தார். பத்திரிகையாளர் அனில் நம்பியாருடன் தனக்கு நெருங்கிய நட்பு இருப்பதாக சொப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியே வந்தன. தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக அனில் நம்பியாரை வியாழக்கிழமை சுங்கத்துறை விசாரித்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சொப்னா சுரேஷுட னான தொடர்பு தெரியவந்ததை அடுத்து ஜனம் டிவியில் இருந்து விலகி இருப்பதாக நிர்வாக ஆசிரியர் அனில் நம்பியார் தெரி வித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.