தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இரண்டு விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொட ரின் முதல் ஆட்டம் (தர்மசாலா) மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-வது ஆட்டம் பஞ்சாப் மாநிலத்தில் மொஹாலி மைதானத்தில் புதனன்று நடைபெற்றது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடை பெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க பேட்டிங் செய்துகொண்டிருக்கும் போது இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர், தென் ஆப்ரிக்க ஆல்ரவுண்டர் பாவுமா அடித்த பந்தை பவுண்டரி லைனில் அசமந்தமாகத் தடுத்தார். ஸ்ரேயாஸின் மந்தமான செயலால் பாவுமா - குயிண்டன் டி காக் ஜோடி கூடுதலாக ஒரு ரன் சேர்த்தது. ஸ்ரேயாஸின் செயலால் கூடுதலாக ஒரு ரன் போய்விட்டதால் ஆத்திரமடைந்த இந்திய அணியின் கேப்டன் கோலி ஸ்ரேயாஸ் த்ரோ (வீசிய) செய்த பந்தை கோபமாக ஸ்டெம்பிங் செய்ய, ஸ்டெம்ப் பறந்து லேசாக உடைந்ததாகக் கூறப்படுகிறது. கோலியின் இந்த முரட்டுத்தனமான செயலுக்கு நடுவர்கள் புகார் ஏதும் கூறவில்லை என்பதால் பிசிசிஐ இந்த நிகழ்வைக் கண்டுகொள்ளவில்லை.