புதுதில்லி:
வெங்காயத்தைத் தொடர்ந்து தக்காளியின் விலையும் அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர். இந்நிலையில் மேலும் ஒரு விலை உயர்வு சுமை வந்துள்ளது.மத்திய அரசின் தகவல்படி தில்லியில், அக்டோபர் 1 ஆம் தேதி 45 ரூபாயாக இருந்த தக்காளியின் சராசரி சில்லறை விலை தற்போது 54 ரூபாயாக உயர்ந்துள்ளது. கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வெள்ளம் மற்றும் பலத்த மழை காரணமாகத் தக்காளி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் கடந்த சில நாட்களில் தக்காளி விலை கடுமையாக அதிகரித்துள்ளது என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். தக்காளியின் தரத்தைப் பொறுத்து தில்லியில் ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 40 ரூபாயாகவும், மும்பையில் 54 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 60 ரூபாயாகவும் தக்காளியின் விலை உள்ளது. தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.