tamilnadu

வெறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சங்பரிவார், பாஜக மீது நடவடிக்கை சிபிஎம் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி, ஜூலை 28- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து தந்தை பெரியாரை இழிவுபடுத்தி, வகுப்புவாத வெறுப்பு பிரச்சாரத்தின் மூலம் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்குலைத்து வருகின்ற பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுதொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது; சங்கராபுரம் வட்டம் வாணாபுரம் பகுதியில் பிஜேபி மற்றும் இந்து முன்னணியினர் ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தியின்போது விநாயகர் சிலைகளை கடைவீதியில் வைப்பதில் தொடர்ந்து பிரச்சனை ஏற்படுத்தி தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இங்குள்ள கிருத்துவ மக்களின் தேவாலயத்தை செயல்பட விடாமல் தடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றனர். எனவே இப்பகுதியில் செயல்பட்டுவரும் வகுப்புவாத சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், வாணாபுரம் பகுதி மக்கள் ஒற்றுமையுடன் வாழ்க்கை நடத்தவும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் எனவும் சிபிஎம் சார்பில் கடந்த 13.9.2019 மற்றும் 17.5.2020 ஆகிய தேதிகளில் தங்களிடமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கட்சியின் சார்பில் மனு அளித்துள்ளோம். இதேபோல கடந்த 17ஆம் தேதி திருக்கோவிலூர் நகரில் உள்ள கீழையூரில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமரியாதை செய்து இருந்தனர்.

இச்சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் வலுவான கண்டன போராட்டம் நடத்தியதால் காவல்துறையினர் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மணி என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் கல்வராயன்மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சி தகவல் பலகையில் எழுதப்பட்டிருந்த பெரியார் பெயரை 26 ஆம் தேதி அன்று காவி சாயம் பூசி மர்மநபர்கள் அழித்துள்ளனர். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம். மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரிகளும் கடந்த மார்ச் 12ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் செய்துள்ள நிலையில் இந்த அமைப்புகளின் முழுமையான விவரங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றாக தெரிந்து இருக்கவே வாய்ப்புள்ளது. எனவே மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டுவரும் வகுப்புவாத சக்திகள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும், மாவட்டத்தில் மக்கள் ஒற்றுமையையும், சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்சியின் மாவட்டக்குழு சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.