கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது. 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விஷச் சாராயம் மரணம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். கள்ளச்சாராயம் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை தொடர்ந்து, விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000மும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்கவும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.