உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தனது மூன்றாம் வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம், உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா தற்போது 7-வது முறையாக வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
மான்செஸ்டர் மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த ஆட்டத்தில், இந்திய அணி டாஸ் வென்றது. இதில் முதலில் பேட்டிங் தேர்ந்தெடுத்து விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன் குவித்தது.
இதில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 113 பந்தில் 140 ரன்களும் (14 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் விராட் கோலி 65 பந்தில் 77 ரன்களும் (7 பவுண்டரி), லோகேஷ் ராகுல் 78 பந்தில் 57 ரன்களும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். பாகிஸ்தான் அணியில், முகமது அமீர் 3 விக்கெட்டும், ஹசன் அலி, வகாப், ரியாஸ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 40 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக, போட்டியை தொடர்ந்து நடத்த முடியவில்லை. இதனால் டக்வொர்த்- லீவிஸ் விதிமுறைப்படி பாகிஸ்தான் அணிக்கு 40 ஓவர்களில் 302 ரன் இலக்காக இருந்தது. அந்த அணி 212 ரன்னையே எடுத்து இருந்ததால் இந்திய அணி 89 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதில் பாகிஸ்தான் அணியின் பகர்ஜமான், அதிக பட்சமாக 62 ரன்களும், பாபர் ஆசம் 48 ரன்களும், இமாத் வாசிம் 46 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, விஜய்சங்கர், ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதன் மூலம், உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா தற்போது 7-வது முறையாக வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. இதுவரை ஒருமுறைகூட தோற்கவில்லை.