tamilnadu

img

நீதித்துறையைப் பரிகசிக்கச் செய்திருக்கிறது -சிபிஎம்

பாபர் மசூதி இடித்தது தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்தியா என்பது அரசமைப்புச் சட்டத்தின் கீழ் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்கிற சித்திரத்தில் கறையை ஏற்படுத்தும். இந்தத் தீர்ப்புக்கு எதிராக மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் மேல்முறையீடு செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

பாபர் மசூதியை இடித்தது சம்பந்தமாக இன்று (புதன்கிழமை) லக்னோ சிறப்பு நீதிமன்றம் அளித்திட்ட தீர்ப்பு குறித்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

லக்னோவில் சிறப்பு சிபிஐ நீதிமன்றம், பாபர்மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 32 பேர்களையும் விடுதலை செய்து அளித்துள்ள தீர்ப்பு, நீதித்துறையை பரிகசிக்கச்செய்யும் விதத்தில் அமைந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை அளிப்பதற்காக 28 ஆண்டுகள் எடுத்துக்கொண்டிருக்கிறது. எனினும்கூட நீதி வழங்கப்பட வில்லை. மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் அங்கே நின்று அந்தக் கிரிமினல் நடவடிக்கைக்கு கட்டளை பிறப்பித்துக்கொண்டிருந்த பாஜக-விஎச்பி-ஆர்எஸ்எஸ் இயக்கங்களின் உயர்மட்டத் தலைவர்கள் அனைவரும் பாபர் மசூதி இடிப்புக்கு சதி செய்த குற்றச்சாட்டில் அப்பாவிகள் என்று நீதிமன்றம் கண்டிருக்கிறது.

சென்ற ஆண்டு நவம்பர் 8 அன்று அயோத்தி தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்திட்ட தீர்ப்பில், பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து மிகமோசமாக சட்டத்தை மீறிய செயல் என்று குறிப்பிட்டிருந்தது. இப்போது, லக்னோ நீதிமன்றம் இந்தக் குற்றத்தின் பிரதானக் கயவர்களை குற்றமற்றவர்கள் என்று கண்டிருக்கிறது.

இந்தத் தீர்ப்பு, இந்தியா என்பது இந்திய அரசமைப்புச்சட்டத்தால் நிர்வகிக்கப்படும் மதச்சார்பற்ற-ஜனநாயக நாடு என்கிற சித்திரத்திற்குக் கறையை ஏற்படுத்திடும். மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) உடனடியாக இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு தாக்கல் செய்திட வேண்டும்.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.

(ந.நி.)