tamilnadu

img

மத்திய அமைச்சர் பதவிக்காக முகாமிட்ட அதிமுக அரசு

கே.பாலகிருஷ்ணன் கேள்வி

திருவாரூர், ஜூன் 14- எட்டாவது ஆண்டாக குறுவை சாகுபடி இல்லை என்ற துயர நிலைக்கு டெல்டா மாவட்டங்கள் தள்ளப்பட்டுள்ளன. இந்த அபாயத்தை கண்டுகொள்ளாமல் தமிழக அரசு உள்ளது. அமைச்சர் பதவிக்காக தில்லியில் முகாமிட்ட அதிமுக தலைவர்கள் இந்த வாழ்வா தார பிரச்சனைக்காக முகாமிடாதது ஏன் என்று சிபிஎம் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். வெள்ளிக்கிழமையன்று திரு வாரூரில் அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர் மேலும் கூறியதாவது; டெல்டா மாவட்ட விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பை எதிர்பார்த்து காத்திருப்பது வழக்க மான ஒன்றாகிவிட்டது. இந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி கடந்து போய்விட்டது. ஆனால் காவிரியில் தண்ணீர் வர வில்லை. 10 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று மத்திய காவிரி நதிநீர் ஆணையம் உத்தர விட்டும் கர்நாடக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. 

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் மழை பெய்தால் தண்ணீர் விடுவோம் என்றார். மழை பெய்தால் தண்ணீர் விட கர்நாடக அரசு எதற்கு? ஐம்ப தாண்டுகால போராட்டங்கள் தான் எதற்கு? தற்போது தமிழகம் 3 முக்கிய பிரச்சனைகளில் சிக்கியுள்ளது. காவிரி நதிநீர் பிரச்சனை, கடுமை யான வறட்சியால் குடிநீர் பஞ்சம், புதிய கல்விக்கொள்கையால் ஆபத்து ஆகிய மூன்று பிரச்சனை கள் தான் அது. புதிய கல்விக்கொள்கையை பொறுத்தவரை மாநில உரிமைகள், பண்பாடு, கலாச்சாரம், தாய்மொழி உரிமை போன்றவற்றை தவிடு பொடியாக்குகிற பல்வேறு ஆபத்துக்கள் அந்த வரைவு திட்டத்திற்குள் உள்ளன. 

இது குறித்து நாடு முழுவதும் ஒரு விரிவான விவாதம் நடத்தாமல் 30 நாட்களுக்குள்ளாக கருத்து கூற வேண்டும் என்று கெடு வித்திக்கிறது மத்திய அரசு.  அதேபோல காவிரி நதிநீர் பிரச்சனை பெரும் சிக்கலாக மாறிக்கொண்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை களில் கவனம் செலுத்தாததால் தமிழகம் இன்றைக்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கி யுள்ளது. வானிலை ஆய்வு மையம்  கடந்த ஆண்டு பருவமழை குறை வாக பெய்யும் என்று அறிவுறுத்தி யிருந்தது.  2018-19 ஆம் ஆண்டுகளில் 403 டிஎம்சி தண்ணீர் காவிரியில் வந்தும் முக்கொம்பு அணை உடைப்பின் காரணமாக அந்த தண்ணீர் வீணாக கடலில் கலந்துவிட்டது. தண்ணீரை சேமித்து வைப்பதற்கான எந்த செயல்திட்டமும் தமிழக அரசிடம் இல்லை. எனவே இப்பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கு தமிழக சட்ட மன்றத்தை தமிழக அரசு உடனடி யாக கூட்ட வேண்டும். 

அணுக்கழிவு

கூடங்குளத்தில் ஏற்கனவே 1 மற்றும் 2 அணு உலைகள் உள்ளன. தற்போது மேலும்  3 மற்றும் 4  அணு உலை பூங்கா அமைப்பதற்கு அணுமின் நிலையம் முயற்சி செய்து வருகிறது. உலகஅளவில் அணு உலை அமைப்பது குறித்து ஒரு வரையறை உள்ளது ஒரே இடத்தில் அணு உலை குவியலாக இருக்கக்கூடாது என்பது தான் அது. ஏற்கனவே உள்ள அணு உலைகள் 60 முறை செயல்படாமல் நின்று போயுள்ளது. இது எதனால் என்பது குறித்து மக்களுக்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. எதிர்காலத்தில் ஏதேனும் ஆபத்து நிகழ்ந்தால் என்ன செய்வது? அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் வேண்டாம் என்று கூறினாலும் ஆளும் அரசுகள் அதனை  அலட்சியப்படுத்துகின்றன. தற்போது அணுக்கழிவுகளை அணு உலைப்பகுதியிலேயே சேமித்து வைக்கப் போவதாக அறிவித்துள் ளார்கள். அணுக்கழிவுகளை பாது காப்பதற்கான தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லை. ஒருவேளை விபத்து நிகழ்ந்தால் சரிபாதி தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும். மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

இதுபோன்ற மக்களை பாதிக்கும் பிரச்சனைகளில் கருத்து கேட்கும் கூட்டங்களை நடத்துவதற்கு அரசு  விரும்புவதில்லை. அப்படி நடத்தினா லும் பேரளவிற்கு நடத்தப்படுகிறது. இந்த அணுக்கழிவினால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறும்  அதிகாரிகள் மக்களின் கருத்துக் களை கேட்போம் என்று கூறு கிறார்கள். அதே நேரத்தில் சமூக ஆர்வலர் சுப.உதயகுமார் போன்றவர்களை திருடர்களைப் போல துரத்தி துரத்தி கைது செய்கிறார்கள். இது கண்டனத்திற் குரியது. 

ஹைட்ரோ கார்பன்
டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டமான ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகள், மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது. இந்த எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்கு ஜனநாயக வழியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இப்போராட்டங்களுக்கு அரசு அனுமதி மறுக்கிறது. காவல்துறை யினக் கொண்டு ஒடுக்குவதோடு வழக்குகளை பதிவு செய்கிறது. இது மோசமான ஜனநாயக விரோத செயலாகும். சேலம் 8 வழிச் சாலை பிரச்சனையில் நீதிமன்றம் தலையிட்டு அரசின் உத்தரவை தடை செய்துள்ளது.

தற்போது கூட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வரும் 23 ஆம் தேதியன்று நடைபெற விருக்கிற மனித சங்கிலி போராட்டத் திற்கு நீதிமன்றம் மூலமாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இப்படி எல்லாவற்றிருக்கும் நீதி மன்றம் செல்வது என்றால் அரசாங்கங்கள் எதற்கு? மக்களின் கொந்தளிப்பைக்கண்டு நடுங்கும் அரசு இதுபோன்ற பொருந்தாத நடவடிக்கைகளில் இறங்குகிறது. மக்கள் இதனை ஏற்க மாட்டார்கள். அரசின் அணுகுமுறை இப்படியே தொடர்ந்தால் தடைகளை மீறி  டெல்டா மாவட்டங்களில் போராட்டங் கள் வெடிக்கும். எனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடை செய்ய வேண்டும்.  செய்தியாளர் சந்திப்பின் போது சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மன்னர் ஆட்சியில் நிலப்பறிப்பு

சமீபத்தில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் இராஜராஜ சோழன் ஆட்சி குறித்து தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையாகியுள்ளது. அவரது கருத்து ஏற்கத்தக்க ஒன்று தான். அதே நேரத்தில் தலித்துக்கள் என்று மட்டுமல்லாமல் அனைத்து ஏழை எளிய மக்களின் நிலங்களும் பறிக்கப்பட்டன. பொதுவாக தஞ்சையை ஆண்ட மன்னர்கள் தங்கள் ஆட்சியில் விவசாய மேம்பாடு, பாசன திட்டங்கள், நீர்வள பாதுகாப்பு போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து ஆட்சி புரிந்துள்ளனர். கரிகால் சோழன் கட்டிய கல்லணையை இன்றும் நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். இதுபோன்ற நல்ல நடவடிக்கைகள் இருந்தாலும் உழைக்கும் மக்களின் மீது 36 வகையான வரிகள் இருந்துள்ளன. ஆடு, மாடு, கோழி என அனைத்திற்கும் வரி இருந்துள்ளது.

கன்னியாகுமரியில் மார்பக வரி என்ற வரி விதிக்கப்பட்டது. மக்கள் இவற்றை எதிர்த்து போராடாமல் இருக்க நிறைய கோவில் குளங்களைக் கட்டி மக்களிடத்தில் தெய்வ நம்பிக்கையை ஊட்டி ஏழை, பணக்காரன், ஏற்றத்தாழ்வு எல்லாம் இறைவனால் விதிக்கப்பட்டது என்று போதித்தார்கள். சோழ மன்னர்களின் ஆட்சிகாலத்தில் ஏராளமானவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அன்றைய ஆட்சிக் காலம் என்பது ஒரு நில உடமை ஆட்சியாக இருந்ததால் எல்லா மக்களிடமிருந்தும் நிலங்கள் பறிக்கப்பட்டு கோவில்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. உலகத்தில் எங்கும் இல்லாத கட்டமைப்பு மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்துள்ளது. எனவே மன்னர்கள் ஆட்சி குறித்து வரலாற்று ரீதியில் விமர்சனங்கள் நிறையவே உள்ளன என்று கூறினார்.