சென்னை,ஜூலை 28- தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு ஆகியவற்றை இணைக்கும் திட்டம் 2020 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று தமிழகப் பொதுப்பணித் துறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில் தாமிரபரணி ஆற்றிலிருந்து அதிக அளவிலான தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இதைத் தடுக்கும் வகையில் நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை, சாத்தான்குளம் ஆகிய பகுதிகளுக்குக் கால்வாய் வழியாகத் தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டது. இதற்காகத் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறுகளை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது இந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே இந்தப் பணிகளைத் தொடர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இதன் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உத்தர விட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்படி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அரசு அமல்படுத்தவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் அப்பாவு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஜூலை 27 அன்று தமிழகப் பொதுப்பணித் துறை செயலாளர் மற்றும் இந்தத் திட்டத்தை அமல்படுத்தி வரும் தொழிலாளர்கள் சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு ஆகியவற்றை இணைக்கும் திட்டம் 2020 டிசம்பருக்குள் முடிக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக ரூ.515. 95 கோடியைத் தமிழக அரசு செலவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 872 கோடி ரூபாய் கூடுதல் செலவுக்காக மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலைக் கோரியுள்ளதாகவும் அதற்காகக் கால அவகாசம் வேண்டும் என்றும் பொதுப்பணித் துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.