tamilnadu

50 சதவீதம் பேர் தொற்று ஏற்பட்டு குணமடைந்துள்ளனர்

சென்னையில் நடைபெற்ற சமூக பரவல் குறித்த ஆய்வில் தகவல்


சென்னை, ஆக. 22 - சென்னையில் கொரோனா தொற்றால் 50 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். அவர்களுக்கு புதிய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளதாக என்பதை கண்டறியும் வகையில் பொதுமக்களிடம் ஆய்வு ஒன்றை நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) உத்தரவிட்டது. பொதுமக்களின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கொண்டு கொரோனா சமூகத்தில் எந்த நிலையில் உள்ளது என்பது அறியும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன்படி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 69 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வின் மூலம் பொதுமக்களிடம் இருந்து (ரேண்டம் முறையில்) எடுக்கப்படும் ரத்த மாதிரிகள் எலிசா பரிசோதனை முறையில் சோதிக்கப்பட்டது. அந்தச் சோதனையில் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அளவு கண்டறியப்பட்டு, அதனடிப்படையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை கண்டறிந்தனர்.

இதன்படி, பல்வேறு இணை நோய் உள்ளவர்கள், நோய் கட்டுப்பாடு பகுதிகளில் இருப்பவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர், ஊடக துறையினர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சாலையோர மற்றும் சந்தை வியாபாரிகள், உள்ளாட்சி ஊழியர்கள், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சென்னையில் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து 12 ஆயிரம் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தது. இந்த ஆய்வு முடிவுகள் சென்னை மாநகராட்சியிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுபடி சோதனை செய்யப்பட்ட 12 ஆயிரம் மாதிரிகளில் 50 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. இது தொடர்பாக ஆய்வை நடத்திய மருத்துவ நிபுணர் ஒருவர் கூறுகையில், இந்த ஆய்வில் பல்வேறு தகவல்கள் தெரிய வந்துள்ளது. இதை முழுவதையும் ஆய்வு செய்த பின்புதான் எத்தனை பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது என்பதை துல்லியமாக கணிக்க முடியும் என்றார். இதைப்போன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 4இல் ஒருவருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ள தெரியவந்துள்ளது. குறிப்பாக, புனேவில் 50 சதவீதம் பேருக்கும், மும்பையில் 57 சதவீதம் பேருக்கும், டெல்லில் 23 சதவீதம் பேருக்கும் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.