states

img

ஹரியானாவில் விஎச்பி ஊர்வலம்: உச்சபட்ச பாதுகாப்பு வளையத்தில் நூ மாவட்டம்

ஹரியானாவில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரின் ஊர்வலம் நடத்த இருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, உச்சகட்ச பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளது ஹரியானாவின் நூ மாவட்டம்.

ஹரியானாவில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி ஊர்வலம் என்கிற பெயரில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு தூண்டிவிட்ட வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர். ஹரியானாவின் நூஹ் பகுதியில் பிரிஜ்மண்டல் ஜலாபிஷேக் யாத்திரைக்கு அனுமதி பெற்றபோது, தங்களின் அணிவகுப்பில் ஆயுதங்கள் இடம்பெறாது என்ற உத்தரவாதம் அளித்தனர். ஆனால், அதனை மீறி ஆயுதங்களைக் கொண்டு வந்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹரியானாவில் மதரீதியாக மக்களை பிளவுப்படுத்த சங்பரிவார அமைப்புகள் மதக்கலவரங்களை கையில் எடுத்து வரும் நிலையில், ஏற்கனவே 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு இன்று  ஊர்வலம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ள போதிலும், தடையை மீறி ஊர்வலத்தை நடத்துவோம் என்று அந்த அமைப்பினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பள்ளிகளுக்கு, வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ட்ரோன்கள் மூலம் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத்து, அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.