states

அயோத்தியில் கொடிகட்டிப் பறக்கும் ரியல் எஸ்டேட் தொழில் ஒரே மாதத்தில் நிலத்தின் மதிப்பு 3 மடங்கு உயர்ந்தது!

லக்னோ, டிச. 31 - ராமர் கோயில் திறக்கப்படும் தேதி அறி விக்கப்பட்டு விட்ட நிலையில், அயோத்தி நகரத்தின் நில மதிப்பு ஒரே மாதத்தில் சுமார் 3 மடங்கு அளவிற்கு உயர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டு மானப்பணிகள் துவங்கியபோதே அங்கு ரியல் எஸ்டேட் தொழில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேகமெடுத்தது. பாஜக  தலைவர்கள் பலர், ராமர் பெயரைச் சொல்லி,  அடிமாட்டு விலைக்கு நிலத்தை வளைத்துப் போட்டனர். பின்னர் அவற்றை கோயிலுக்கு பல மடங்கு விலைவைத்து கைமாற்றி விட்டனர்.

தசரதா மஹால் கோயில் மடத்தின் 890 ச.மீ. நிலம் ராமர் கோயிலுக்கு என்று கூறி வாங்கப்பட்டது. ஆனால், நேரடியாக ராமஜென்ம பூமி அறக்கட்டளை பெயரில் வாங்கப்படாமல், அயோத்தி பாஜக மேய ரான ரிஷிகேஷ் உபாத்யாவின் மருமகனான தீப் நாராயண் பெயரில் ரூ. 30 லட்சத்திற்கு பெறப்பட்டு, பின்னர் தீப் நாராயண் மூலம் அதேநிலம் ரூ.2.5 கோடிக்கு ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு விற்பனை செய்யப் பட்டது; அதேபோல கோயில் அருகே யுள்ள மற்றொரு நிலம் தனிநபர் பெயரில்  ரூ. 2 கோடிக்கு வாங்கப்பட்டு, அதேநாளி லேயே, ராமர் கோயில் அறக்கட்டளைக்கு ரூ.  18 கோடியே 50 லட்சத்திற்கு கைமாற்றப் பட்டது என்றெல்லாம் 2 ஆண்டுகளுக்கு முன்பே ஆதாரப்பூர்வமாக குற்றச்சாட்டுக் கள் வெளியாகின.

இந்நிலையில்தான், அயோத்தியில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பாபர்  மசூதி இடிக்கப்பட்டு, அந்த இடத்தில், சுமார் ரூ. 1,800 கோடி செலவில் கட்டப்பட்ட ராமர் கோயில், ஜனவரி 22 அன்று திறப்பு விழா காண உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடை பெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 

7500 விவிஐபி-க்கள்
விழாவில் கலந்து கொள்ளுமாறு, பிரதமர் நரேந்திர மோடி துவங்கி, திபெத் புத்தமதத் தலைவர் தலாய் லாமா, ‘பதஞ்சலி’ கார்ப்பரேட் சாமியார் பாபா ராம்தேவ், சினிமா நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பிரபல தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி உள்பட  நாட்டின் 7500 விவிஐபி-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அயோத்தியா நகரமே மிகப்பெரிய பரபரப்பில் உள்ளது.

நகரின் உள்கட்டமைப்பு வசதிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. திறப்பு விழாவிற்காக ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கடவுள் ராமர் பெயரில் விமான நிலையம் மாற்றப்பட்ட பிறகு பல விமானங்கள் வந்து செல்வதற்கான அறிவிப்புகள் வெளி யாகி உள்ளன.

விமானம், ரயில் சேவை
சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 175 திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. 37 தொழில்துறைகள் அதற்கான ஒப்புதலைப் பெற்று அயோத்தி யாவில் வேலை நடைபெற்று வருகிறது.  அதில் 98 மிக முக்கியமான திட்டங்களா கும். ஸ்ரீராம் சர்வதேச விமான நிலை யத்தின் பணிகள் டிசம்பர் மாத இறுதியில் முடிவடைய உள்ளன. ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ மற்றும் ‘இண்டிகோ’ விமா னங்கள் டிசம்பர் 30 முதல் தில்லிக்கும் அயோத்தியாவுக்கும் இடையே இயக்கப் பட்டன. அதேபோல, ரயில் சேவையைப் பொறுத்தவரை, ‘வந்தே பாரத்’ ரயில் அயோத்தியா-விலிருந்து தில்லி மற்றும் லக்னோ இடையே இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.a

30 ஆயிரம் கோடி ரூபாயைக் கொட்டிய உ.பி. பாஜக அரசு 
இவையெல்லாம் கடவுள் ராமர் பெயரில் நடந்தாலும், இவ்வளவு பெரிய - ரூ.30 ஆயிரம் கோடி கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில், மறைமுகமாக கார்ப்பரேட் நலன்களும் இருக்கின்றன. உத்தரப்பிரதேச அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட புதிய அயோத்தியா பசுமை நகரத் திட்டத்தால் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் குறிப்பாக இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் (IHCL) நிறுவனத்தின் ஜிஞ்சர் மற்றும் விவாண்டா, சரோவர், ராடிசனின் பார்க் இன், விந்தியம் மற்றும் ஓயோ ஆகிய நிறுவனங்கள் ஏற்கெனவே அங்கு வேலையை தொடங்கியுள்ளன.

நிலத்தின் மதிப்பு கடுமையாக உயர்ந்தது
இதனால், அயோத்தியா நகரத்தில் உள்ள இடங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. “நகர எல்லைக்குள் சுமார்  ரூபாய் ஆயிரம் மற்றும் 2000 என அக்டோ பர் மாதத்தில் இருந்த ஒரு சதுர அடியின் விலை, தற்போது ரூபாய் 4000 மற்றும் ரூபாய் 6000 என உயர்ந்துள்ளது. 2019-க்கும்  2023-க்கும் இடையே இடத்தின் விலை கடுமை யாக உயர்ந்துள்ளது” என்று ‘ரியல் எஸ்டேட்’ புரோக்கர்கள் கூறுகின்றனர். மேலும், நிலத்தின் மதிப்பு உயர்வதில் பாஜக புள்ளிகளே பெரிய அளவிற்கு லாபம் அடைவதாகவும் பலர் கூறுகின்றனர்.

தொகுப்பு : ஆர்.மைதிலி