ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் பயிற்சி மேற்கொண்டு வந்த மாணவர் உருஜ் (20 வயது) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கனூஜ் அருகே உள்ள சம்தான் கிராமத்தை சேர்ந்த உருஜ் என்ற மாணவர், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் கடந்த ஒராண்டாக நீட் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இன்று உருஜின் குடும்பத்தினர் அவரை தொடர்புகொண்டபோது நீண்ட நேரமாகியும் பதிலளிக்காததால், அவரது நண்பர்களை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து அவரது நண்பர்கள், உருஜ் தங்கியிருக்கும் அறைக்குச் சென்றபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டில் மட்டும் கோட்டா பயிற்சி மையத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டில் இங்கு 15 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.