கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலமானார்.
பிரபல பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தெற்கு மும்பையில் உள்ள ‘பிரீச் கேண்டி’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் தான் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.
அதனைதொடர்ந்து மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் மீண்டும் செயற்கை சுவாசக் கருவி உதவியுடனே சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தீவிர சிகிச்சையில் இருந்த பாடகி லதா மங்கேஷ்கர் சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் , ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த பாடகி லதா மங்கேஷ்கர், 1942 ஆம் ஆண்டு தனது 13 ஆவது வயதில் இசை பயணத்தை தொடங்கினார். பல்வேறு இந்திய மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, இந்திய சினிமாவின் சிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவராக கொண்டாடப்படுகிறார்.
இத்தகைய சிறப்புமிக்க இவர் இந்தியாவின் 'மெலடி குயின்' என்றும் போற்றப்படுகிறார். மேலும் இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருதும் பெற்றவர். அதனைதொடர்ந்து பத்ம பூஷன், பத்ம விபூஷன், தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பல தேசிய திரைப்பட விருதுகள் உட்பட பல விருதுகளையும் பெற்று இன்றளவும் பலரால் போற்றப்பட்டு வருகிறார்.